ஹோண்டா சிட்டியுடன் நேருக்கு நேர் மோத வரும் புதிய டொயோட்டா வயோஸ்!
ஹோண்டா சிட்டி மார்க்கெட்டை குறி வைத்து புத்தம் புதிய வயோஸ் செடான் காரை களமிறக்குவதற்கு டொயோட்டா பரிசீலித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இந்த இரு கார் மாடல்களும் போட்டி போட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த புதிய வயோஸ் காரை களமிறக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கார் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காருக்கு குறைவான விலை கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும்.

கொள்கை முடிவு
இந்திய வர்த்தகத்திற்கான எதிர்கால கொள்கைகளில் பல புதிய மாற்றங்களை செயல்படுத்துவதற்கு டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த புதிய கொள்கையின்படி, டொயோட்டா வயோஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டியோஸுக்கு கல்தா
எட்டியோஸுக்கு பதிலாக இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் டொயோட்டா திட்டமிட்டுள்ளதாம். அதாவது, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அந்த சமயத்தில் மாறிவிடும் என்பதை கணித்து எட்டியோஸ் விற்பனையை நிறுத்த டொயோட்டா கொள்கை முடிவை வகுத்துள்ளதாம். 2017ம் ஆண்டில் இந்த புதிய வயோஸ் கார் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் தலைமுறை
மூன்றாம் தலைமுறை மாடலான டொயோட்டா வயோஸ் செடான் கார் ஹோண்டா சிட்டி காருக்கு நேரடி போட்டியை கொடுக்கும். டிசைன், எஞ்சின், இடவசதி மற்றும் வசதிகள் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் மிகச்சிறந்த மிட்சைஸ் மாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்
டொயோட்டா வயோஸ் காரில் 107 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் என இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும்.

உற்பத்தி
பெங்களூரில் உள்ள ஆலையில் எட்டியோஸ் செடான் காரின் உற்பத்தியை படிப்படியாக குறைக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டு முதல் எட்டியோஸுக்கு பதிலாக இந்த புதிய வயோஸ் செடான் காரின் உற்பத்தியை முழு அளவில் செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 50,000 கார்கள் என்ற உற்பத்தி இலக்குடன் இந்த புதிய காரை கொண்டு வர டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








