இந்தியாவில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை திறக்கும் ஃபோக்ஸ்வேகன்!
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை விரைவில் திறக்க உள்ளது ஃபோக்ஸ்வேகன் குழுமம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான வளர்ச்சியையும், பெருமளவு மனித வளத்தையும் கொண்ட நாடாக இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

ஜெனரல் மோட்டார்ஸ், ஃபியட், ஹூண்டாய் மோட்டார்ஸ் போன்ற கார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மென்பொருள் வடிவமைப்பு மற்றும் இதர தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை இந்தியாவில் நடத்தி வருகின்றன.
இந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமாக திகழும் ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை திறக்க திட்டமிட்டுள்ளது.
புனே நகரில் அமைய இருக்கும் இந்த புதிய தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் புதிதாக 1,000 எஞ்சினியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அடுத்த மாதம் இந்த புதிய மையம் திறக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி, லம்போர்கினி, போர்ஷே உள்ளிட்ட அனைத்து பிராண்டு தயாரிப்புகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும்.
முதலில் 500 பொறியாளர்களுடன் செயல்பட துவங்கும் இந்த மையம் அடுத்த சில ஆண்டுகளில் 1,000 பொறியாளர்கள் கொண்டதாக விரிவாக்கப்படும். இந்த மையத்தின் தலைவராக மிலன் குமார் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








