மீண்டும் டூரக் எஸ்யூவி, பீட்டில் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!
இந்திய மார்க்கெட்டில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் காலில் றெக்கையை கட்டிக் கொண்டு புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால், புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் ஃபோக்ஸ்வேகன் இருந்த சில மாடல்களின் விற்பனையையும் நிறுத்தியது.
அவ்வாறு விற்பனை நிறுத்தப்பட்ட டூரக் எஸ்யூவி மற்றும் பீட்டில் காரையும் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. புத்தம் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்ற நிலையில், இந்த இரு கார் மாடல்களையும் மீண்டும் கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விலை அதிகம் என்ற காரணத்தாலேயே இரண்டு கார் மாடல்களும் விற்பனையில் சோபிக்கவில்லை. இவை இரண்டும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டதும் முக்கிய காரணம். இந்த நிலையில், இந்த முறை மீண்டும் அறிமுகம் செய்யும்போது இரு மாடல்களையும் CKD என்று கூறப்படும் முக்கிய பாகங்களை தருவித்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்க ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.

இந்தியாவிலேயே முடிந்தவரை பாகங்களை பெற்று இரு கார்களையும் அசெம்பிள் செய்ய திட்டமிட்டிருப்பதால், ஓரளவு வாடிக்கையாளர்களை கவரும் விலையில் இந்த மாடல்கள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இதுதவிர்த்து, புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலான டைகுன் எஸ்யூவியையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்தும் அந்த நிறுவனம் தீவிரமான முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








