டாடா, லேலண்ட்டுக்கு போட்டியாக குறைவான விலையில் வரும் வால்வோ பஸ்கள்!
அசோக் லேலண்ட், டாடா பஸ்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில், குறைவான விலை கொண்ட பஸ் மாடல்களை வால்வோ களமிறக்குகிறது.
இந்திய சொகுசு பஸ் மார்க்கெட்டில் ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. வால்வோ பிராண்டுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியிலும், பயணிகள் மத்தியிலும் நன்மதிப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், சொகுசு ரகத்தில் அல்லாத குறைவான விலை கொண்ட பஸ் மாடல்களை வால்வோ இந்தியாவில் களமிறக்குகிறது. வால்வோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜப்பானை சேர்ந்த வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான யுடி., பிராண்டு பஸ்களைத்தான் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது வால்வோ.
இதற்காக, பெங்களூர் அருகேயுள்ள கோலாரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பெங்களூரை சேர்ந்த எஸ்எம் கண்ணப்பா ஆட்டோமொபைல்ஸ் என்ற நிறுவனத்துடன் பஸ் கோச்சுகளை வடிவமைத்து தருவதற்காக வால்வோ ஒப்பந்தம் செய்துள்ளது.
வால்வோ அமைத்து வரும் புதிய பஸ் ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் பஸ்களை டெலிவிரி கொடுக்க வால்வோ திட்டமிட்டுள்ளது.
தயாரிப்பு பணிகளை யுடி நிறுவனமும், விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகளை வால்வோவும் மேற்கொள்ள உள்ளன. இந்த புதிய பஸ்கள் ரூ.45 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். இதுதவிர, இந்தியாவிலிருந்து பஸ்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் வால்வோ சொகுசு பஸ்களை விட இந்த பஸ்கள் பாதி விலை கொண்டதாக இருக்கும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான பஸ் வர்த்தகத்தை பெறும் வாய்ப்பு வால்வோவுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








