தமிழகத்தில் புதிய வாகன உதிரிபாக ஆலையை திறந்த பாஷ் நிறுவனம்!
எஞ்சின் உதிரிபாங்கள் தயாரிப்புக்காக தமிழகத்தில் புதிய வாகன உதிரிபாக உற்பத்தி ஆலையை பாஷ் நிறுவனம் திறந்திருக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இந்தியாவில் 5 ஆலைகள் மூலம் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில், எதிர்கால தேவையை கருதி, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் புதிய ஆலையை பாஷ் நிறுவனம் அமைத்திருக்கிறது.
6,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த புதிய ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை விரைவாகவும், குறைவான விலையிலும் சப்ளை செய்வதற்கு இந்த புதிய ஆலை துணைபுரியும் என்று பாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான எஞ்சினுக்குரிய உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாஷ் நிறுவனத்தின் 6வது ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








