ஏன் மாருதி ஜிப்ஸியை சென்னை போலீசார் வாங்குகின்றனர் தெரியுமா?
சென்னை பெருநகரத்தில் கண்காணிப்பு பணிகளுக்காக புதிதாக 135 மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகளை மாநகர போலீசார் வாங்க உள்ளனர். இந்த மாதத்திற்குள் இந்த மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகள் சென்னை போலீசாருக்கு டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.
நவீன தகவல் தொடர்பு மற்றும் விசேஷ வசதிகளுடன் போலீசாருக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு வரும் இந்த மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகள் விரைவில் சென்னை நகர பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், ஏன் மாருதி ஜிப்ஸியை சென்னை போலீசார் தெரிவு செய்தனர் என்பதற்கான காரணம் மற்றும் மாருதி ஜிப்ஸியின் விசேஷங்கள் என்னென்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. ஏன் ஜிப்ஸி...?
திருவல்லிக்கேணி, மைலாப்பூர் ஜாம் பஜார் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள குறுகிய சாலைகளில் போலீசார் தற்போது பயன்படுத்தும் மஹிந்திரா பொலிரோ, டொயோட்டா இன்னோவா போன்ற ரோந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. ஆனால், இந்த சாலைகளில் எளிதாக ரோந்து செல்வதற்கு ஏதுவாக சிறிய வடிவம் மற்றும் உறுதிமிக்க கட்டமைப்பு கொண்ட மாருதி ஜிப்ஸியை தேர்வு செய்ததாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

02. ஏரியாவுக்கு ஒன்று...
சென்னை பெருநகரில் உள்ள 135 காவல் நிலையங்களுக்கு தலா ஒரு மாருதி ஜிப்ஸி எஸ்யூவி வழங்கப்பட உள்ளது. குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை தடுப்பதற்கு கூடுதல் ரோந்து வாகனங்கள் தேவைப்படுவதையடுத்து, புதிதாக மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகள் வாங்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

03. விசேஷ வசதிகள்
போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் நேரடி தொடர்பில் இருப்பதற்கான ஜிபிஎஸ் மற்றும் வாகன நகர்வை கண்காணிக்கும் ஜிபிஆர்எஸ் சிஸ்டம் போன்ற நவீன தொடர்பு சாதனங்கள் இந்த மாருதி ஜிப்ஸிகளில் பொருத்தப்பட்டிருக்கும். நீலம் மற்றும் சிவப்பு வண்ண சுழல் விளக்குகள் இருக்கும். இவைதவிர, எச்சரிக்கை விடுப்பதற்கான மைக், ஸ்பீக்கர்களும் இந்த மாருதி ஜிப்ஸிகளில் பொருத்தப்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

04. ராணுவ பயன்பாடு
மாருதி ஜிப்ஸி எந்தவொரு சாலைநிலைகளிலும் எளிதாக எதிர்கொள்ளும் உறுதிமிக்க கட்டமைப்பு கொண்டது. இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு பாதுகாப்புப் படை பிரிவுகளில் மாருதி ஜிப்ஸி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை போலீசாரும் மாருதி ஜிப்ஸியை தேர்வு செய்துள்ளனர்.

05. சிறப்பம்சங்கள்
இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எஸ்யூவி மாடல். 15 இஞ்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இருப்பதால் ரோந்து பணிகளுக்கு சிறப்பானதாக இருக்கிறது. 1020 கிலோ கெர்ப் எடை கொண்டது.

06. எஞ்சின்
மாருதி ஜிப்ஸி எஸ்யூவியில் 4 சிலிண்டர் 1,298சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவரையும், 103 என்எம் டார்க்கையும் வழங்கும்.

07. ஊங்க ஊருக்கும் உண்டு...
சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் மாருதி ஜிப்ஸி ரோந்து வாகனமாக போலீசாருக்கு வழங்கப்பட உள்ளது. ஆனால், 2013ம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்டு இப்போதுதான் சென்னை போலீசாருக்கு டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. எனவே, உங்கள் ஊருக்கு வர இன்னும் பல மாதங்களோ அல்லது சில வருடங்களோ பிடிக்கலாம். ஆனால், உண்டு...!!


Click it and Unblock the Notifications








