ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களுக்கு ஹேக்கர்கள் மூலம் ஆபத்து!
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் மூலம் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக கருதுவதாக அமெரிக்காவை சேர்ந்த கம்ப்யூட்டர் பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
வரும் 2020ம் ஆண்டு முதல் ஓட்டுனர் உதவியில்லாமல் இயங்கும் கார்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் நிகழ்நேர கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

விபத்து குறையும்
வழியில் இருக்கும் எச்சரிக்கை பலகைகள், தடைகள், அறிவிப்புகளை எளிதில் உணர்ந்துகொண்டு அந்த இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப இவை செயல்படும் என்று கூறப்படுவதால், இந்த கார்கள் பாதுகாப்பில் சிறந்தவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்களும் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது.

மென்பொருள் தகர்ப்பு ஆபத்து
வைஃபை சிஸ்டம் மூலமாக, தானியங்கி கார்களின் மென்பொருளில் மாற்றங்களை செய்ய முடியும் என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. அப்படி, சைபர் தாக்குதல் மூலம் ஓட்டுனர் இல்லா காரின் மென்பொருளில் மாற்றங்கள் செய்தால் என்னவாகும் என்று சோதனை செய்யப்பட்டது.

சோதனை
குறுக்கே இருக்கும் தடையை கண்டு அந்த கார் பிரேக் போடுவதற்கு பதிலாக, ஆக்சிலரேட்டரை அதிகப்படுத்தி, தடையில் மோதியது. இந்த சோதனை மூலம், ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களின் மென்பொருளுக்கு ஹேக்கர்கள் மூலமாக ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதிர்ச்சித் தகவல்
இந்த சோதனை முயற்சி தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனங்களையும், காப்பீட்டு நிறுவனங்களையும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஓட்டுனர் உதவியில்லாமல் இயங்கும் கார்களுக்கு ஹேக்கர்கள் மூலமாக மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

எச்சரித்த நிறுவனங்கள்
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் மற்றும் வெர்ஜீனியா பல்கலைகழகத்துடன் இணைந்து கம்ப்யூட்டர் மென்பொருள் தகர்ப்பு முறியடிப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் சேவைகளை வழங்கி வரும் மிஷன் செக்யூர் மற்றும் பெரோன் ரோபோட்டிக் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆபத்து குறித்து எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications