இந்தியாவிலேயே ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் உற்பத்தி: ஃபியட் க்றைஸ்லர் அறிவிப்பு!
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் கார் நிறுவனம் தற்போது ஃபியட் க்றைஸலர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஜீப் பிராண்டிலான சொகுசு எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் எத்தனித்து வருகிறது.
ஆனால், கார் மார்க்கெட்டின் தட்பவெப்பம் சரியில்லை என தள்ளிப் போட்டு வருகிறது. இந்த நிலையில், ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை ஃபியட் க்றைஸ்லர் அறிவித்திருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே ஜீப் பிராண்டு சொகுசு எஸ்யூவிகளை அசெம்பிள் செய்ய இருப்பதாக அந்த குழுமம் உறுதி செய்துள்ளது.

அறிமுகம் எப்போது?
இந்த ஆண்டு இறுதியில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது.

இறக்குமதி
முதலில் இறக்குமதி செய்து ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். பின்னர், இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனைக்கு விடப்பட உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி
2017ம் ஆண்டு முதல் இந்தியாவிலேயே ஜீப் பிராண்டு எஸ்யூவிகளின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இதன்மூலம், மிக சரியான விலையில் தனது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்பதோடு, சந்தைப் போட்டியையும் எளிதாக தகர்க்க முடியும் என ஃபியட் க்றைஸ்லர் நம்புகிறது.

டாடாவுடன் ஒப்பந்தம்
இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை அசெம்பிள் செய்வதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்த்தை மேற்கொள்ளவும் தீவிர முயற்சிகளை ஃபியட் க்றைஸ்லர் மேற்கொண்டுள்ளது.

முதலீடு
இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை அசெம்பிள் செய்வதற்காக அமைக்கவேண்டிய உற்பத்தி பிரிவுகளுக்காக 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய ஃபியட் க்றைஸ்லர் குழுமம் முடிவு செய்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி செர்ஜியோ மார்சியோனியும் உறுதி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications








