ஆஃப் ரோடு பிரியர்களுக்கு ஓர் குட் நியூஸ்... பிஎஸ்-4 எஞ்சினுடன் வரும் ஃபோர்ஸ் கூர்கா!!
பாரத் ஸ்டேஜ் - 4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட புதிய டீசல் எஞ்சினுடன் ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இது ஆஃப் ரோடு வாகன பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்திருக்கிறது. மேலும், மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மாற்றான ஓர் சிறந்த ஆஃப் ரோடு எஸ்யூவியாக இருக்கும்.

புதிய எஞ்சின்
தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.6 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பாரத் ஸ்டேஜ் -3 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது. இதனால், மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்ய இயலாத நிலை உள்ளது. இந்தநிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் மற்றொரு புதிய 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட ஆப்ஷனிலும் ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி வருகிறது.

எஞ்சின் பவர்
தற்போதைய 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 81 எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. ஆனால், புதிதாக பொருத்தப்பட இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 139 எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். இரு எஞ்சின் ஆப்ஷன்களும் தொடர்ந்து வழங்கப்படும்.

பாரத் ஸ்டேஜ் -4 எஞ்சின்
புதிய 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி மெட்ரோ நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களையும் சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம், விற்பனையில் கூடுதல் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடல்கள்
தற்போது சாஃப் டாப் மாடல் 2 வீல் டிரைவ் சிஸ்டம், 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஹார்டு டாப் பொருத்தப்பட்ட மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கிறது. புதிய எஞ்சின் கொண்ட மாடலும் இதே ஆப்ஷன்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்டு டாப் பொருத்தப்பட்ட மாடலில் ஏசி, மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகள் இருக்கும் என்பதால், தினசரி பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்கும். எனவே, இந்த மாடல் மெட்ரோ நகர வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

அறிமுகம்
இந்த ஆண்டு இறுதியில் புதிய 2.2 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.6.30 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் ஃபோர்ஸ் கூர்காவின் புதிய பாரத் ஸ்டேஜ்-4 மாடல் சற்று கூடுதல் விலை கொண்டதாக வரலாம்.

பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்கள்
விரைவில் பாரத் ஸ்டேஜ் -4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், அரசின் புதிய வழிகாட்டு முறைகளின் நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்கு முன்கூட்டியே இதுபோன்ற மாடல்களை அறிமுகம் செய்வதற்கு கார் நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








