ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை திரும்ப அழைக்கும் நடவடிக்கை!
சஸ்பென்ஷனில் பொருத்தப்பட்டிருக்கும் போல்ட் சரியாக இறுக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
பின்புற சஸ்பென்ஷன் அமைப்பின் ட்விஸ்ட் பீமில் இருக்கும் போல்ட் சரியாக இறுக்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், பைவோட் போல்ட் உடைந்து விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.

சஸ்பென்ஷன் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு, கையாளுமையிலும் பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. அத்துடன், இந்த போல்ட் சரியாக இறுக்கப்படாததால், விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து, சென்னை ஆலையில் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் முதல் 2014ம் ஆண்டு ஏப்ரல் வரை உற்பத்தி செய்யப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்களை ஆய்வு செய்வதற்காக திரும்ப அழைக்கப்பட உள்ளன. மொத்தம் 16,444 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுகளில் பிரச்னை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








