ரூ.5,000 கோடியில் சென்னையில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் ஃபோர்டு!
ரூ.5,000 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய கார் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க ஃபோர்டு கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் சென்னை அருகேயுள்ள மறைமலை நகரில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு, குஜராத் மாநிலத்தில் தனது இரண்டாவது கார் ஆலையை அமைத்தது. சமீபத்தில் இந்த புதிய ஆலை திறக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் மீண்டும் ஒரு பெரும் முதலீட்டை ஃபோர்டு கார் நிறுவனம் செய்ய இருக்கிறது. இதற்காக, இன்னும் சில மாதங்களில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச சிஇஓ., மார்க் ஃபீல்ட்ஸ்," இந்தியாவில் மிக திறமையான பொறியியல் துறை பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் ஆர்வமாக இருக்கிறோம்," என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் அமைய இருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் கார் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்தான், ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் அந்த நிறுவனத்தின் மிகப்பெரியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான தயாரிப்புகள் மட்டுமின்றி, உலக அளவிலான புதிய மாடல்களை உருவாக்கும்போது சென்னை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பொறியாளர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான மாடல்களை உருவாக்கும்போது, உற்பத்தி செலவீனம் பாதியாக குறையும் என்பதால், புதிய ஃபோர்டு கார்களின் விலை மிக சவாலானதாக நிர்ணயிக்கப்பட்டு நம் நாட்டு சந்தையில் விற்பனைக்கு வரும்.
இந்த புதிய ஆராய்ச்சி மையத்தின் மூலமாக முதலாவதாக புத்தம் புதிய மிட்சைஸ் செடான் கார் உருவாக்கப்பட உள்ளது. அடுத்து, ஒரு எம்பிவி காரும் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த இரு மாடல்களும் முழுக்க இந்திய தயாரிப்பாக இருக்கும் என்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








