கோவை டு சென்னை... ஜி.டி.நாயுடு உருவாக்கிய காரின் சாதனை பயணம்!
கடந்த 86 ஆண்டுகளுக்கு முன்னர் ஜி.டி.நாயுடு உருவாக்கிய பென்ஸ் மோட்டார்வேகனின் பிரதி மாடல் கோவையிலிருந்து, சென்னைக்கு நீண்ட தூர சாதனைப் பயணத்தை துவங்கியது.
கோயம்புத்தூரில் உள்ள ஜி.டி.நாயுடு மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அந்த மூன்று சக்கர கார் நேற்று மாலை தனது சாகசப் பயணத்தை துவங்கியது. இன்று இரவு சென்னையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தை பற்றியும், பென்ஸ் மோட்டார் வேகன் பற்றியும் முக்கியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பென்ஸ் மோட்டார் வேகன்
1886ல் ஜெர்மனியை சேர்ந்த எஞ்சினியர் கார்ல் பென்ஸ், குதிரைக்கு மாற்றாக, எந்திரம் பொருத்தப்பட்ட முதல் வாகனத்தை உருவாக்கினார். அந்த மூன்று வாகனத்துக்கு அவர் காப்புரிமையையும் பெற்றார். மேலும், அந்த காரை அவரது மனைவி பெர்தா சோதனை ஓட்டம் நடத்திக் காட்டி அசத்தினார்.

உருமாதிரி
கார்ல் பென்ஸ் உருவாக்கிய பென்ஸ் மோட்டார்வேகன் போன்றே, ஒரு மூன்று சக்கர கார் மாடலை கோவையை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு உருவாக்கினார். 86 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அந்த கார் தற்போது கோவையிலுள்ள ஜி.டி.நாயுடு மியூசியத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

சாகசப் பயணம்
இந்திய ஆட்டோமொபைல் துறையின் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் எடுத்துக் காட்டும் விதமாக, 86 ஆண்டுகளுக்கு முன் ஜி.டி.நாயுடு உருவாக்கிய அந்த பென்ஸ் மோட்டார்வேகன் பிரதி மாடல் காரில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நீண்ட பயணம்
கோவையிலுள்ள ஜி.டி.நாயுடு மியூசியத்திலிருந்து நேற்று மாலை இந்த சாகசப் பயணம் துவங்கியது. மஹாராஷ்டிர மாநிலம், இந்து சமஸ்தான அரச குடும்பத்தை சேர்ந்த மன்வேந்திர சிங் சாகசப் பயணத்தை துவங்கி வைத்தார். மேலும், அந்த காரை ஜி.டி.நாயுடு மியூசியத்திலிருந்து 30 கிமீ தூரம் வரை அவர் ஓட்டி வந்தார். ஜி.டி.நாயுடு தயாரித்து கொடுத்த பென்ஸ் மோட்டார்வேகன் பிரதி மாடல் ஒன்று மன்வேந்திர சிங் குடும்பத்தினரிடம் உள்ளது.

எரிபொருள்
சாகசப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜி.டி.நாயுடுவின் காருக்கு தேவையான 50 லிட்டர் பென்ஸீன் எரிபொருள் மற்றும் கூலண்ட்டாக பயன்படுத்துவதற்கான 100 லிட்டர் தண்ணீர் ஆகியவை மற்றொரு காரில் எடுத்துச் செல்லப்படுகிறது.

6 ஓட்டுனர்கள்
கோவை- சென்னை இடையிலான 500 கிமீ தூரத்தை 30 மணிநேரத்தில் கடப்பதற்கு திட்டமிட்டு இந்த சாகசப் பயணம் நடந்து வருகிறது. 30 கிமீ.,க்கு ஒரு ஓட்டுனர் என்ற வகையில், 6 ஓட்டுனர்கள் இந்த காரை செலுத்துகின்றனர். அதிகபட்சமாக மணிக்கு 20 கிமீ வேகத்தில் செல்லும்.

நம்பிக்கை
கடந்த ஜூன் மாதம் இந்த காரை புதுப்பித்து, கோயம்புத்தூரிலிருந்து சேலம் வரையிலான 165 கிமீ தூரம் பயணித்தோம். அந்த பயணம் வெற்றிகரமாக அமைந்ததால், இந்த நீண்ட தூர பயணத்தை துவங்கியிருக்கிறோம்," என்று ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிர்வாகி ஜி.டி.கோபால் தெரிவித்தார்.

விழா
இன்று இரவு 10.30 மணியளவில் இந்த கார் சென்னையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தாஜ் ஓட்டலில் இந்த சாகசப் பயணத்திற்கான வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.

சாதனை பயணம்
1886ல் கார்ல் பென்ஸ் மனைவி பெர்த்தா, மான்ஹீம் என்ற இடத்திலிருந்து ஃபோர்ஸீம் என்ற இடத்திற்கு 194 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த காரை செலுத்தி சாதனைப் படைத்தார். இந்த நிலையில், முதல்முறையாக இந்த வகை பாரம்பரிய கார் 500 கிமீ தூரத்தை கடப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த காரில் ஸ்டீயரிங் வீல் இல்லாமல் செலுத்த வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








