விரைவில் எர்டிகாவுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹூண்டாய் எம்பிவி கார்!
மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா போன்ற மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் மாடல்களை எதிர்கொள்ளும் வகையில், புதிய எம்பிவி காரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ்.
இந்த எம்பிவி ரக வாகனங்கள் பிரிவில், இந்தியாவை பொருத்த வரை டொயோட்டா இன்னோவாதான் சிறப்பான நன்மதிப்பை பெற்றிருக்கிறது. மற்ற வாகனங்களை காட்டிலும், டாக்சி வாகன ஓட்டிகளும் டொயோட்டாவின் இன்னோவாவையே அதிகமான அளவில் உபயோகிக்கின்றனர். அதே நேரத்தில், தனி நபர்கள் மாருதி சுசுகி எர்டிகா மற்றும் ஹோண்டா மோபிலியோ போன்ற வாகனங்களை தேர்வு செய்கின்றனர்.

தனி மதிப்பு;
ஹுண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்திய வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரத்யேக வரவேற்பு உள்ளது. இந்த எம்பிவி ரக வாகன பிரிவில், தங்கள் நிறுவனத்தின் சார்பில் சரியான எம்பிவி இல்லாத காரணத்தால், ஹுண்டாய் இந்தியா புதிய எம்பிவையை விரைவில் வெளியிட உள்ளது.

எம்பிவி பற்றிய தகவல்கள்;
ஹுண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி-க்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால், ஹுண்டாய் உயர் அதிகாரிகள், இந்த புதிய எம்பிவியின் வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இஞ்ஜின் வகைகள்;
2016-ல் வெளியாக உள்ள ஹுண்டாய் எம்பிவி கார், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்களுடன் இரு வகையிலும் வெளியிடப்பட உள்ளது. வழக்கம் போல், டாக்ஸி ஓட்டுனர்கள் டீசல் கார்களையும், மற்ற வாடிக்கையாளர்கள் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட கார்களை அதிகமாக தேர்வு செய்வர் என தெரிகிறது.

க்ரெட்டாவுக்கான வரவேற்பு;
தென்- கொரிய நிறுவனமான ஹுண்டாய் சமீபத்தில், க்ரேட்டா காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்தது. இது மக்களிடையே உடனடியாக வரவேற்பு பெற்றதால், ஹுண்டாய் இந்தியாவின் வாகன விற்பனை அமோகமாக கூடியது. இதே வரவேற்பு புதிய எம்பிவி காருக்கும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மற்றொரு எஸ்யூவி;
4-மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார் வகையிலும், மற்றொரு காம்பேக்ட் எஸ்யூவி-யை அறிமுகம் செய்வது குறித்து ஹுண்டாய் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
இந்த வகை கார்களின் விற்பனையில், ஃபோர்ட் ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திராவின் புதிய வெளியீடான டியூவி 300 உள்ளிட்ட வாகனங்கள் முன்னோடியாக விளங்குகின்றன. சப் 4-மீட்டர் வகையிலான கார்களின் சந்தையிலும், போட்டிபோட ஹுண்டாய் நிறுவனம் ஆயத்தமாக மற்றொரு காம்பேக்ட் எஸ்யூவி-யை அறிமுகம் செய்ய உள்ளது.

ஹுண்டாயின் குறிக்கோள்;
இந்தியாவின் நான்கு சக்கர வாகன சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் முதன்மையான இடத்தில் இருக்க விரும்புகிறது. அதற்காக, அவ்வபோது புதிய புதிய வகையிலான கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவின் வாடிக்கையாளர்களும், வழக்கமான கார்களை காட்டிலும், புதிய தோற்றங்கள் மற்றும் புதிய பொலிவு மற்றும் நல்ல திறன் கொண்ட கார்களை அதிகம் விரும்புகின்றனர். எனவே, தற்போதைய நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்படும் அனைத்து ரக கார்களுக்கும் பெரும் சந்தை வாய்ப்புகள் உள்ளது என்பது மறுக்க முடியாத உன்மையாகும்.


Click it and Unblock the Notifications








