இந்தியாவில் 'லேண்ட்' ஆன பவர்ஃபுல் அமெரிக்க ஜீப் எஸ்யூவி!!
ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் அதிசக்திவாய்ந்த எஸ்ஆர்டி மாடல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, சாலை சோதனை ஓட்டங்களுக்காக ஜீப் செரோக்கீ எஸ்யூவி இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மாடல் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, விரைவில் ஜீப் செரோக்கீ எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வருவது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ
வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வேதச வாகன கண்காட்சியில் புதிய ஜீப் செரோக்கீ, ரேங்லர் மற்றும் ரெனிகடே ஆகிய மூன்று எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
அதில், ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்லர் எஸ்யூவி மாடல்கள் அடுத்த ஆண்டிலேயே விற்பனைக்கு வருகின்றன. அதைத்தொடர்ந்து, ஜீப் ரெனிகடே எஸ்யூவியை 2017ல் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜீப் பிராண்டின் தாய் நிறுவனமான ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டு இருக்கிறது.

பிரிமியம் மாடல்
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் பிராண்டின் செரோக்கீ எஸ்யூவி, ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனத்தின் தயாரிப்புகள் போட்டி போடும் பிரிமியம் கார் மார்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் பிராண்டு மதிப்பை உயர்த்தும் மாடலாக ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் கருதப்படுகின்றன. மேலும், முழுக்க முழுக்க இந்தியாவிற்கான ஓர் மாடலையும் ஜீப் பிராண்டில் அறிமுகப்படுத்த ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டு இருக்கிறது.

எஞ்சின்
சர்வதேச அளவில் பல விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 3.0 லிட்டர் வி6 ஈக்கோ டீசல் எஎஞ்சின், 3.6 லிட்டர் பென்டாஸ்டார் வி6 எஞ்சின், 5.7 லிட்டர் வி8 எஞ்சின் மற்றும் 6.4 லிட்டர் எஸ்ஆர்டி வி8 எஞ்சின் ஆகிய எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் தற்போது 6.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட HEMI எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 475 பிஎச்பி பவரையும், 644 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழியாக எஞ்சின் பவர் சக்கரங்களுக்கு செலுத்தப்படும்.

பாதுகாப்பு அம்சங்கள்
பிரிமியம் எஸ்யூவி மாடலாக வரும் ஜீப் செரோக்கீ எஸ்யூவியில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், தானியங்கி பார்க்கிங் சிஸ்டம், மழை நேரத்தில் கார் வழுக்காமல் பிரேக் பிடிக்கும் தொழில்நுட்பம், ஏர்பேக்குகள் என்று ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் அசெம்பிள்
முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. தேவையையும், வரவேற்பையும் பொறுத்து, பின்னர் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம், ரஞ்சன்கவுனிலுள்ள ஆலையில் இந்த புதிய மாடல் அசெம்பிள் செய்யப்படும்.

போட்டியாளர்கள்
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, ஆடி க்யூ5 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

எஸ்ஆர்டி பற்றி...
ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் எஸ்ஆர்டி மாடல் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறோம். இதில், எஸ்ஆர்டி என்பது ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் க்றைஸ்லர், டாட்ஜ் மற்றும் ஜீப் பிராண்டு கார்களின் அதிசக்திவாய்ந்த மாடல்களை ட்யூனிங் செய்து தரும் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








