பெட்ரோல் நிரப்பும்போது தீப்பிடித்து எரிந்த கேடிஎம் பைக்... பெரும் பரபரப்பு!
பெட்ரோல் நிரப்பும்போது கேடிஎம் பைக் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதை ஓட்டி வந்தவர் சிறிய காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் சிசிவிடி கேமரா காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கோவாவில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு அந்த பைக் ரைடர் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெட்ரோல் நிரப்பும் குழாயில் இருக்கும் சேஃப்டி வால்வு சரியாக வேலை செய்யவில்லை என்பதுடன், பெட்ரோல் நிலை ஊழியரும் கவனக்குறைவாக இருந்ததாக தெரிகிறது.
இதனால், அதிகப்படியான பெட்ரோல் டேங்கிலிருந்து வழிந்து எஞ்சின் மீது பட்டதையடுத்து, சூடாக இருந்த எஞ்சினிலிருந்து திடீரென தீப்பற்றியதாக சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக தீப்பிடித்தவுடன் பைக்கை ஓட்டி வந்தவர் சுதாரித்துக் கொண்டு வேகமாக பைக்கை விட்டு விட்டு கீழே இறங்கியதால் லேசான தீக்காயங்களுடன் தப்பிவிட்டார்.
மேலும், தீப்பிடித்து எரிந்த பைக்கை பெட்ரோல் நிலை ஊழியர்கள் அவசரமாக தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், கேடிஎம் பைக் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், பெட்ரோல் நிரப்பும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
Source: Rushlane


Click it and Unblock the Notifications








