போலி உதிரிபாகங்களை ஒழிக்க அதிரடி சோதனைகள் நடத்தும் மஹிந்திரா!
டெல்லியில், காஷ்மீரி கேட் பகுதியில் போலி உதிரிபாகங்கள் விற்பனை கடைகளில் போலீசாருடன் இணைந்து மஹிந்திரா நிறுவனம் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.
போலி வாகன உதிரிபாகங்களால், வாகன உதிரிபாக சப்ளையர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. மலிவு விலை பாகங்களால் தங்களது வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், வாகனங்களில் பொருத்தப்படும் போலி உதிரிபாகங்கள் பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் குண்டூரில், போலி உதிரிபாகங்கள் விற்பனைக் கடைகளில் மஹிந்திரா நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அதிரடி சோதனைகளை நடத்தியது.
இதில், ஏராளமான போலி வாகன உதிரிபாகங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தநிலையில், டெல்லியிலும் அதேபோன்றதொரு சோதனையை மஹிந்திரா நடத்தியுள்ளது. மஹிந்திராவின் கொள்முதல் பிரிவு அதிகாரிகள் அடங்கி குழு போலீசாருடன் இணைந்து இந்த சோதனை நடத்தியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த சோதனையில், ஏராளமான போலி உதிரிபாகங்கள் கைப்பற்றப்பட்டதாக மஹிந்திரா நிறுவனத்தின் கொள்முதல் துறை அதிகாரி ஹேமந்த் சிக்கா தெரிவித்துள்ளார்.
போலி உதிரிபாகங்கள் பெரும் தலைவலியாக இருப்பதாகவும், வாகனத்தின் பாதுகாப்பு பிரச்னையாகவும் இது உருவெடுத்துள்ளதாக அவர் கூறினார். போலி உதிரிபாகங்கள் விற்பனையை ஒடுக்குவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் விரைவில் மற்றொரு அதிரடி சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மஹிந்திரா மட்டுமின்றி ஹூண்டாய் உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்களும் போலி உதிரிபாக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகளை துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








