அடுத்த 5 ஆண்டுகளில் 15 புதிய கார்களை களமிறக்கும் மாருதி!
அடுத்த 5 ஆண்டுகளில் 15 புதிய கார் மாடல்களை மாருதி கார் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக, மாருதி கார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் தோஷிஹிரோ சுஸுகி கூறுகையில்," அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய கார்களை ஜப்பானில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.

அதில், 15 கார்கள் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். உலக அளவில் இந்தியாவை மிக முக்கியமான மார்க்கெட்டாக கருதுகிறோம். மேலும், 2025ம் ஆண்டில் உலக அரங்கில் இந்தியா மூன்றாவது பெரிய கார் மார்க்கெட்டாக உருவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, புதிய மாடல்களை களமிறக்குவது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் மாருதியுடன் இணைந்து தயாரிப்புகளை சந்தைப்படுத்துவோம். கொஞ்சம் கொஞ்சமாக சொகுசு வசதிகள் நிறைந்த கார்களை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.
புதிய மாடல்களுக்காக ஹரியானா மாநிலம், ரோடக்கில் உள்ள மாருதியின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் அதிக அளவில் முதலீடு செய்யவும் சுஸுகி திட்டமிட்டுள்ளது. மாருதி நிறுவனம் சுயமாகவே கார்களை உருவாக்கும் வகையில், இந்த மையம் மேம்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








