இந்த ஆண்டு இறுதியில் மாருதி ஆல்ட்டோ காரின் டீசல் மாடல்!
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் குட்டி கார் மாடலான மாருதி ஆல்ட்டோவின் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை கிளப்பியிருக்கிறது. செலிரியோ டீசலை தொடர்ந்து ஆல்ட்டோ காரின் டீசல் மாடலை அறிமுகம் செய்ய மாருதி தயாராகி வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆல்ட்டோ 800
மாருதி ஆல்ட்டோ கார் தற்போது இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 800சிசி பெட்ரோல் எஞ்சினுடன் ஆல்ட்டோ 800 மாடலும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஆல்டோ கே10 ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், டீசல் மாடல் ஆல்ட்டோ 800 பாடி ஸ்டைல் கொண்ட மாடலை அடிப்படையாக கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின் ஆப்ஷன்
தற்போது மாருதி ஆல்ட்டோ கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது. இதுதவிர, மூன்றாவதாக டீசல் மாடலிலும் வர இருக்கிறது. அதிக மைலேஜ் கொண்ட குறைவான விலை மாடலாக வருவதால், அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டீசல் எஞ்சின் விபரம்
சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செலிரியோ டீசல் மாடலில் இருக்கும் அதே 800சிசி எஞ்சின்தான் ஆல்ட்டோ 800 மாடலிலும் இடம்பெற இருக்கிறது. இந்த இரண்டு சிலிண்டர் கொண்ட 793சிசி எஞ்சின் 46 எச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்
மேலும், செலிரியோவைவிட அதிக மைலேஜ் தரும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும் என்பதால், இந்தியாவின் அதிக மைலேஜ் கொண்ட கார் என்ற பெருமையை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

மாற்றங்கள்
தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோ 800 பெட்ரோல் மாடலுக்கும், புதிதாக வரும் டீசல் மாடலுக்கு எந்தவித மாறுதல்களும் இருக்காது. டீசல் மாடல் என்பதற்கான பேட்ஜ் மட்டுமே பொருத்தப்பட்டிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.4.5 லட்சம் ஆன்ரோடு விலையில் புதிய மாருதி ஆல்ட்டோ 800 டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








