டெல்லியில், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு தடை!
டெல்லியில் அதிகரித்து வரும் மாசு பிரச்னையை கட்டுப்படுத்தும் விதத்தில், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில், வாகனப் பெருக்கத்தின் அளவு கட்டுக்கடங்காமல் செல்கிறது. டெல்லி மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரபிரதேசத்தில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் டெல்லிக்கு விஜயம் செய்கின்றன.

தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், டெல்லியில் வாகனங்களால் ஏற்படும் மாசு அளவு பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஸ்வந்தர் குமார் தெரிவித்திருக்கிறார்.
இந்த உத்தரவின் மூலம் டெல்லியில் 10 ஆண்டுகளை கடந்த 1,18,773 தனிநபர்கள் பயன்படுத்தும் கார் உள்ளிட்ட டீசல் வாகனங்களும், 34,659 வர்த்தக வாகனங்களும் இயக்க முடியாத நிலையில் இருக்கின்றன. இதுதவிர, அண்டை மாநிலங்களிலிருந்தும், நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் டிரக்குகளும் இந்த தடை உத்தரவால் பாதிப்பை சந்திக்கும்.
மேலும், 2,500 அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் இந்த தடையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இந்த உத்தரவுக்கு பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த தடை உத்தரவால் 10 ஆண்டு பழைமையான டீசல் கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
மேலும், டீசல் வாகனங்களுக்கான மதிப்பும் வெகுவாக அங்கு குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லியில் 15 ஆண்டு பழமையான அனைத்து வகை வாகனங்களுக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. ஆனால், அந்த தடை இதுவரை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








