வாகன விற்பனைக்கு பிரத்யேக இணையதளத்தை திறந்த ஸ்னாப்டீல்
இணைய வழி வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல், ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் என்னும் புதிய ஆட்டோமொபைல் தளத்தை உருவாக்கியுள்ளது.
ஸ்னாப்டீல் நிறுவனம், வலைதளம் மூலம் மோட்டர்சைக்கிள்களை விற்க துவங்கி, சுமார் ஆண்டு காலத்திற்கு பின்பு, இந்த ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் தளம் உருவாக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஸ்னாப்டீல் முன்னதாக சுசுகி, டட்சன், பியாஜியோ, மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. வரும் மாதங்களில், இன்னும் பல்வேறு பிராண்ட்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஸ்னாப்டீல் நிறுவனம், இது வரை சுமார் 3,00,000 பைக்களை விற்றுள்ளதாக தெரிவிக்கிறது. இதில், 57 சதவிகிதம் பேர், முதல் முறையாக வாகனம் வாங்கியுள்ளனர் என்பது முக்கிய செய்தியாகும். 60 முதல் 65 சதவிகிதம் பேர், மெட்ரோ பகுதிகள் அல்லாத இடங்களில் இருந்து பைக்களை வாங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் வலைதளம் மூலம், வாடிக்கையாளர்கள் டீலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள், பெயரளவு முன்பதிவு கட்டணம் செலுத்தி, வாகனத்தை டெஸ்ட்-டிரைவ் செய்து கொள்ளலாம். இதையடுத்து, வாங்கப்படும் வாகனங்கள் வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கே டோர் டெலிவரி செய்யப்படும்.
இதோடு மட்டுமல்லாமல், ஸ்னாப்டீல், அதன் துணை நிறுவனமான ருபீபவர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுலபமான கடன் வசதிகள் செய்து தருகிறது. மேலும், யூனிகாமர்ஸ் என்ற துணை நிறுவனம் டீலர்களின் பட்டியல்களை ஒருங்கிணைத்து வைத்துள்ளது. இவற்றிலிருந்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த டீலர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இப்படிபட்ட இணைய வழி வர்த்தகம் மூலம், ஸ்னாப்டீல் அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் டாலர்கள் என்ற மொத்த விற்பனை மதிப்பை எட்ட நினைக்கிறது.


Click it and Unblock the Notifications








