பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக நம் நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்தநிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 45 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, விரைவில் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
அதேவேளை, கச்சா எண்ணெயை ஆர்டர் செய்து இறக்குமதி செய்வதற்கான காலமும், அதனை சுத்திகரிப்பு செய்து விற்பனைக்கு அனுப்புவதற்கும் 30 முதல் 40 நாட்கள் பிடிக்கின்றன. அதற்குள், அந்த கச்சா எண்ணெயின் விலை மதிப்பு வெகுவாக குறைந்துவிடுகிறது.
இதன்காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, விலை குறைப்பு செய்வதை தவிர்ப்பது குறித்தும் எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








