"வாழ்க்கை ஒரு வட்டமடா"! அவமானப்படுத்திய ஃபோர்டுக்கு 'கை' கொடுத்த டாடா!
இன்டிகா கார் பிராண்டை விற்க முயற்சித்தபோது, ரத்தன் டாடா ஃபோர்டு அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்ட தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை தற்போது ரத்தன் டாடாவிற்கு நெருக்கமானவரும், டாடா கேப்பிட்டல் நிறுவனத்தின் அதிகாரியுமான கத்லே தெரிவித்திருக்கிறார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் இந்திய கார்
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவான கார்தான் டாடா இண்டிகா. கடந்த 1998ம் ஆண்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டிற்குள்ளாகவே விற்பனை சரியில்லாததால் தோல்வியுற்ற காராக பெயர் பெற்றது.

விற்பனைக்கு பரிந்துரை
பெரும் கனவுகளுடன் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த இண்டிகா கார் தோல்வியுற்றதில் ரத்தன் டாடா அதிர்ச்சியுற்றார். இந்த கார் பிராண்டை விற்றுவிடுமாறு நெருக்கமானவர்களும், டாடா மோட்டார்ஸ் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கியதால் வேறு வழியின்றி இண்டிகா கார் பிராண்டை ரத்தன் டாடா விற்க முடிவு செய்தார்.

ஃபோர்டு அழைப்பு
இண்டிகா கார் பிராண்டை வாங்குவதற்கு அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. மும்பையிலுள்ள டாடா மோட்டார்ஸ் தலைமையகமான பாம்பே ஹவுஸுக்கு ஃபோர்டு அதிகாரிகள் வந்து தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். மேலும்,இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த டெட்ராய்ட் வருமாறு டாடாவுக்கு ஃபோர்டு அழைப்பு விடுத்தது. இதற்காக, ரத்தன் டாடா மற்றும் பிரவீன் கத்லே உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் டெட்ராய்ட் சென்றனர்.

அவமானம்
பேச்சுவார்த்தையின்போது ஃபோர்டு அதிகாரிகள் இண்டிகா கார் பிராண்டை வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தாமல், கார் தயாரிப்பு பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எதற்காக இந்த துறையில் இறங்கீனிர்கள் என்று ஏளனமாக கேட்டு அவமதித்துள்ளனர். அதன் பின்னர் டெட்ராய்டிலிருந்து நியூயார்க் நகருக்கு விமானத்தில் பயணித்த 90 நிமிடங்களும் ரத்தன் டாடா பெரும் மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கத்லே தெரிவித்துள்ளார்.

மாத்தி யோசி திட்டம்
சம்பவம் நடந்தவுடன் நாடு திரும்பியவுடன் இன்டிகா காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டது.மேலும், தனி நபர் மார்க்கெட்டில் கவனம் செலுத்துவதை விட்டு, வர்த்தக மார்க்கெட்டில் கவனம் செலு்ததி இன்டிகாவின் விற்பனையை அதிகரிக்க செய்தனர். இதன்மூலம், நல்ல விற்பனையை இன்டிகா பதிவு செய்து முத்திரை பதித்தது.

வாழ்க்கை ஒரு வட்டம்டா...
சம்பவம் நடந்து அடுத்த 9 ஆண்டுகளில் அதே ஃபோர்டு நிறுவனம் தனது கீழ் செயல்பட்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களை விற்பதற்கு டாடாவிடம் மண்டியிட்டது. ஆனால், பழசை நினைக்காமல் ரத்தன் டாடா ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களை வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்து கைகொடுத்ததுதான் ஹைலைட்.

கத்லே பங்கு
இண்டிகா கார் பிராண்டை விற்க முயற்சித்தபோது ரத்தன் டாடாவுடன் உடன் சென்ற கத்லேதான் தென்கொரியாவின் தேவூ மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் நிறுவனங்களை டாடா கையகப்படுத்தியதில் பெரும் பங்காற்றியவர். தற்போது டாடா கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








