ஃபோக்ஸ்வேகன் ஜெர்மனி கார் ஆலையில் ஊழியரை கொன்ற ரோபோ!
ஜெர்மனியிலுள்ள ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில், பணியாளர் ஒருவர் ரோபோவின் எந்திர கைகளில் சிக்கி நசுங்கி உயிரிழந்தார்.
பிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாவ்னேட்டல் என்ற இடத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்கு சொந்தமான கார் உற்பத்தி ஆலை உள்ளது.

இந்த ஆலையில், கார் உதிரிபாகங்களை கையாள்வதற்காக ரோபோ ஒன்றை அமைக்கும் பணியில், ஒப்பந்ததாரரின் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது ஊழியர் ஒருவரை ரோபோ கவ்வி பிடித்து நசுக்கியது. இதில், அந்த இளைஞர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின்போது மற்றொரு ஊழியரும் அருகில் நின்றுள்ளார். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். இந்த விபத்திற்கு மனித தவறே காரணமாக இருக்கலாம். ரோபோவில் தொழில்நுட்ப தவறுகள் இருக்க வாய்ப்பில்லை என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த ரோபோவை தொழிலாளர்கள் இல்லாத, பகுதியில்தான் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நவீன தலைமுறை ரோபோ இல்லை என்றும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








