2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கோடா சூப்பர்ப் அறிமுகம்?
புதிய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் கார் சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளாட்ஃபார்ம்
ஸ்கோடாவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்த புதிய சூப்பர்ப் கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது, விஷன் சி கான்செப்ட் அடிப்படையாகக் கொண்டு இந்த காரை முழுமையாக்கியுள்ளனர்.

எஞ்சின் ஆப்ஷன்
சர்வதேச அளவில் 5 பெட்ரோல் எஞ்சின் மாடல்கள் மற்றும் 3 விதமான டீசல் எஞ்சன் ஆப்ஷன்களில் ஸ்கோடா சூப்பர்ப் கிடைக்கும். அதேநேரத்தில், இந்தியாவில் தற்போது இருக்கும் ஒரேயொரு பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில்தான் வர இருக்கிறது. இந்தியாவில் 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வருகிறது. பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். டீசல் மாடல் ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டுமே கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்
எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும். டைனமிக் சேஸீ கன்ட்ரோல் சிஸ்டம், ரெயின் சென்சார், லைட் சென்சார், ஹீட்டடு சீட்ஸ், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
மிக அட்டகாசமான டிசைனில் வரும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் ரூ.20 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








