ஃபார்ச்சூனருக்கு இணையான புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இணையான ரகத்தில் புதிய எஸ்யூவி மாடலை ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்ய இருக்கிறது.
2013ம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஃபோக்ஸ்வேகன் கிராஸ்புளூ எஸ்யூவி கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்படுகிறது.

யெட்டி எஸ்யூவியைவிட கூடுதலான விலை கொண்ட பிரிமியம் மாடலாக இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் சிஇஓ., வின்ஃப்ரைடு வாலேண்டு தெரிவித்துள்ளார்.
இந்த புதிய எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. ஏ ப்ளஸ் என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த புதிய எஸ்யூவியின் மாதிரி இப்படித்தான் இருக்கும் என்று கூறி, ஆட்டோ மோட்டோ என்ற தளம் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
இந்த புதிய எஸ்யூவி 7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். மேலும், எம்க்யூபி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் கொண்டதாக வர இருக்கிறது.
2016ம் ஆண்டில் சர்வதேச அளவில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதே ஆண்டு இறுதியில் அல்லது 2017ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா சூப்பர்ப் செடான் காருக்கு இணையான விலையில், அதாவது ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
Photo Credit: Auto Moto


Click it and Unblock the Notifications








