உட்கார்ந்த இடத்திலிருந்து ஓடும் காரை முடக்கி கலங்கடித்த மென்பொருள் வல்லுனர்கள்!!
எதிர்காலத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்கள் சாலை விபத்துக்களை குறைக்கும், பாதுகாப்புக்கு அதிக உத்தரவாதம் கொடுக்கும் என்று கருதப்பட்டு வந்தது. இந்த கூற்றை கடந்த மாதம் வெளியான செய்திகள் தவிடு பொடியாக்கின.
அதாவது, தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட கார்களின் சாஃப்ட்வேரை ஹேக்கர்கள் முடக்கிவிடும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த கம்ப்யூட்டர் துறை பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். இதுபற்றி, ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், சமீபத்தில் அவர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் செயல் விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எஸ்யூவி ஒன்றினை சாஃப்ட்வேர் நிபுணர்கள் இருவர் உட்கார்ந்த இடத்திலிருந்து முடக்கினர்.

செயல்விளக்கம்
நெடுஞ்சாலையில் சென்ற பிற வாகனங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர். 15 கிமீ சுற்றளவில் இருந்து கொண்டு சம்பந்தப்பட்ட எஸ்யூவியின் சாப்ட்வேரை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து முடக்கினர்.

செயலிழந்த கார்
அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த எஸ்யூவியின் எஞ்சின் பிரேக் மற்றும் ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டு என அனைத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்து அவர்கள் கட்டுப்படுத்தினர். அதேநேரத்தில், உண்மையான ஹேக்கர்களால் இது செய்யப்பட்டிருந்தால், ஒரே நேரத்தில் அந்த ஜீப் எஸ்யூவியால் பல விபத்துக்களை ஏற்படுத்தியிருக்க முடியும். இந்த செயல்விளக்க சோதனை அந்நாட்டு நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணையம் மற்றும் வாகன தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்னைகுரிய கார்கள்
முதலில் எந்த நிறுவனத்தின் கார் முடக்கப்பட்டது என்பதை வெளியில் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கார்களில்தான் இந்த பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. செயல்விளக்கம் நிகழ்த்தி காண்பிக்கப்பட்ட மாடல் ஜீப் செரோக்கீ எஸ்யூவி. இதுதவிர, அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தால் விற்பனை செய்யப்பட்ட 4.70 லட்சம் கார்களில் இதுபோன்று ஹேக்கர்களால் முடக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்ட்வேர் அப்டேட்
சம்பந்தப்பட்ட அந்த ஃபியட் க்றைஸ்லர் யூ - கனெக்ட் என்ற ஆன்போர்டு சாஃப்ட்வேரின் பாதுகாப்பு குறைப்பாட்டை சரிசெய்ய இப்போது தீவிர முயற்சிகளை அந்த நிறுவனம் செய்து வருகிறது. குறைபாட்டை சரிசெய்வதற்கான புதிய சாஃப்ட்வேர் ஒன்றையும் உடனடியாக அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

முடக்குவது கடினம்
இந்த செயல்முறை இன்டர்நெட் தொடர்பில் இயங்கும் தொழில்நுட்பம் கொண்ட கார்களின் பாதுகாப்பில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட காரை முடக்குவதற்கு அதன் ஐபி அட்ரஸ் தெரிந்தால்தான் முடக்க முடியுமாம். மேலும், ஒவ்வொரு முறையும் கார் ஸ்டார்ட் செய்யப்படும்போது, புதிய ஐபி அட்ரஸில் இயங்கும் என்பதால், அவ்வளவு எளிதாக காரை முடக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








