டீசல் கார்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தடை... மயிரிழையில் தப்பிய கார் மாடல்கள்!
வரும் ஜனவரி 1ந் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை டெல்லியில் 2,000சிசி மற்றும் அதற்கு மேல் சிசி கொண்ட டீசல் கார்களை பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையால், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, டொயோட்டா, மஹிந்திரா உள்ளிட்ட பல முன்னணி கார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்த தடை உத்தரவிலிருந்து சில கார் மாடல்கள் மயிரிழையில் தப்பியிருக்கின்றன. அந்த கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. செவர்லே க்ரூஸ்
செவர்லே க்ரூஸ் காரில் 1,998சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவிலிருந்து இந்த கார் மயிரிழையில் தப்பியிருக்கிறது. விற்பனையில் ஏற்கனவே சொதப்பி வரும் செவர்லே க்ரூஸ் காருக்கு இந்த தடையால் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அதிலிருந்து தப்பியிருப்பது செவர்லே நிறுவனத்துக்கு சற்று ஆறுதல் தரும் விஷயம். வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய செவர்லே க்ரூஸ் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

02. ஸ்கோடா கார்கள்
இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் தடுமாறி வரும் ஸ்கோடா நிறுவனத்துக்கு டெல்லி மிக முக்கியமான மார்க்கெட். இந்தநிலையில், அந்த நிறுவனத்தின் ஸ்கோடா ஆக்டாவியா, யெட்டி எஸ்யூவி மற்றும் சூப்பர்ப் பிரிமியம் செடான் கார்கள் இந்த தடையிலிருந்து மயிரிழையில் தப்பியிருக்கின்றன. இந்த கார்களின் டீசல் மாடல்களில் 1,968சிசி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், புதிய தலைமுறை சூப்பர்ப் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

03. ஆடி கார்கள்
ஆடி கார் நிறுவனத்தின் மிகவும் விரும்பப்படும் ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடலான ஆடி ஏ3 காரிலும் ஸ்கோடா கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1,968சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ3 மட்டுமில்லை, ஏ8 காரை தவிர்த்து ஏ4, ஏ6 ஆகிய அனைத்து செடான் கார்களிலுமே இந்த எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், மயிரிழையில் ஆடி கார் நிறுவனம் தப்பித்தது. இந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு பேரிடியாய் அந்த நிறுவனத்துக்கு இறங்கியிருக்கிறது. ஆனால், ஆடி வெகு லாவகமாக தப்பியிருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை முந்துவதற்கு ஆடிக்கு ஓர் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

04. பிஎம்டபிள்யூ கார்கள்
பிஎம்டபிள்யூ எக்ஸ்1, எக்ஸ்3 ஆகிய எஸ்யூவி மாடல்கள் மற்றும் 3 சீரிஸ் செடான் கார் ஆகியவையும் இந்த தடை உத்தரவிலிருந்து சிறிய வித்தியாசத்தில் தப்பியிருக்கின்றன. ஆம், இந்த காரில் 1,998சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. தடை உத்தரவால் பிஎம்டபிள்யூவுக்கு பாதிப்பு இருந்தாலும், மெர்சிடிஸ் பென்ஸ் அளவுக்கு இல்லை எனலாம்.

05. ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா
ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா காரும் உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவிலிருந்து தப்பியிருக்கிறு. ஸ்கோடா, ஆடி கார்களில் பயன்படுத்தப்படும் அதே 1,968சிசி டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ஜெட்டாவின் போட்டியாளர்களான டொயோட்டா கரொல்லா, ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் ரெனோ ஃப்ளூயன்ஸ் ஆகிய கார்கள் சிக்கிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








