இக்னிஷன் பிரச்னை: 2 மில்லியன் கார்களை திரும்ப அழைக்கிறது சுஸுகி!
இக்னிஷன் சுவிட்சில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, 2 மில்லியன் கார்களை திரும்ப அழைக்க இருக்கிறது சுஸுகி கார் நிறுவனம். சுஸுகி நிறுவனத்தின் வரலாற்றில் மிக அதிகபட்ச அளவில் திரும்ப பெறும் நடவடிக்கையாக இது கூறப்படுகிறது.
குறிப்பாக, ஸ்விஃப்ட், வேகன் ஆர் மற்றும் ஆல்ட்டோ கார்கள் இந்த திரும்ப பெறும் நடவடிக்கையில் சிக்கியிருக்கின்றன. தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுஸுகி வெளியிட்டிருக்கும் இந்த ரீகால் அறிவிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தீப்பிடிக்கும் வாய்ப்பு
ஜப்பானில், ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் கார்களின் இக்னிஷன் சுவிட்சில் தீப்பிடிப்பதாகவும், சில சமயம் புகை வருவதாகவும் சுஸுகி நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. மொத்தம் 67 கார்களில் பிரச்னை ஏற்பட்டதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், போலீஸ் பயன்படுத்தும் 18 கார்களும் அடங்கும்.

உறுதியானது...
இந்த புகார்கள் தொடர்பாக, மேற்கொண்ட ஆய்வில், இக்னிஷன் சுவிட்சில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் 31ந் தேதி ஜப்பானில் பிரச்னைக்குரிய கார்களுக்கு சுஸுகி ரீகால் அறிவிப்பு வெளியிட்டது.

இதே பிரச்னை...
ஜப்பானில் 18.7 லட்சம் கார்களும், ஜப்பானில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 1.30 லட்சம் கார்களும் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

முன்னெச்சரிக்கை
இதுவரை உயிரிழப்பு அல்லது பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கையாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கார்கள் இந்த நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதர பிராண்டுகளும் உண்டு
ஜப்பானில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக செவர்லே க்ரூஸ் கார்களையும், மஸ்தா பிராண்டுக்காக ஏஇசட் வேகன் உட்பட 3 கார்களையும் சுஸுகி உற்பத்தி செய்கிறது. இந்த கார்களும் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

இழப்பு
இந்த மிகப்பெரிய திரும்ப பெறும் நடவடிக்கையால், சுஸுகி நிறுவனத்துக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஆனால், அதன் மதிப்பு குறித்த தகவலை அந்த நிறுவனம் தெரிவிக்க மறுத்துவிட்டது.


Click it and Unblock the Notifications








