துபாயில், டிரைவிங் லைசென்ஸ் தேர்வை இனி தமிழில் எழுதலாம்!
துபாயில், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வை இனி தமிழிலேயே எழுதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த புதிய தேர்வு முறை நடைமுறைக்கு வருகிறது.
துபாயில், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வு ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கம்ப்யூட்டர் மூலம் 30 நிமிடங்களுக்கு நடத்தப்படும். இதில், தேர்ச்சி பெற்றால்தான் அடுத்தக் கட்ட செயல்முறை தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இந்த நிலையில், ஓட்டுனர்களுக்கான எதிர்கால தேவையை கருதியும், ஓட்டுனர் தேர்வில் பங்கேற்பவர்கள் தங்களது தாய்மொழியிலேயே தேர்வை எளிதாக எழுதும் விதத்திலும் புதிய மொழிகளை சேர்க்க அந்நாட்டு சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம்(RTA) முடிவு செய்துள்ளது.
இதன்படி, புதிதாக 7 மொழிகளில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது, அதில், தமிழ், ஹிந்தி, வங்கம் மற்றும் மலையாளம் என 4 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, சீன, ரஷ்ய மற்றும் பெர்சிய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, தங்களது தாய்மொழியை விருப்பத் தேர்வாக குறிப்பிட வேண்டும்.
தாய்மொழியிலேயே தேர்வை சந்திப்பதன் மூலம், இனி தமிழர்கள் எளிதாக அங்கு வாகன ஓட்டுனர் உரிமத்தை பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த புதிய தேர்வு முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறிப்பாக, தமிழர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








