ஆட்டோமொபைல் துறையிலிருந்து தமிழகத்துக்கு கணிசமான முதலீடு!
சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் கணிசமாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் கணிசமான அளவு முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.

அதன்படி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தமிழகத்தில் ரூ.6,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதில், முதல்கட்டமாக சென்னையில் உள்ள மஹிந்திரா வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யப்படும்.
இதைத்தொடர்ந்து, படிப்படியாக ரூ.4,000 கோடி வரை கூடுதலாக முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசுடன் மஹிந்திரா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அடுத்து, யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையும் ஆலையில் ரூ.3,900 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலை விரிவாக்கத்திற்காக கூடுதலாக ரூ.800 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக மாநாட்டில் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, எம்ஆர்எஃப் டயர் தயாரிப்பு நிறுவனம், பெரம்பலூரில் ரூ.6,600 கோடி முதலீட்டில் புதிய ஆலை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக கணிசமான முதலீடு தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. இன்று மாநாடு முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications








