ஏஎம்டி கியர்பாக்ஸை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய டாடா திட்டம்!
ஏஎம்டி கியர்பாக்ஸை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏஎம்டி என்ற புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல நிறுவனங்களும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முக்கியத்தும் அளித்து வருகின்றன.

இந்தநிலையில், டாடா ஸெஸ்ட் காரைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் டாடா ஜென்எக்ஸ் நானோ காரின் ஏஎம்டி மாடலை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவின் மிக குறைவான விலை ஏஎம்டி கார் என்பதால், நானோ காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்திடமிருந்து ஏஎம்டி கியர்பாக்ஸ் சப்ளை பெறுவதுடன், இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், கால விரயம் ஏற்படுவதால், குறித்த காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களை கொடுக்க முடியாத நிலை இருக்கிறது.
இதனை தவிர்க்கும் விதத்தில், இந்தியாவிலேயே ஏஎம்டி கியர்பாக்ஸை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலமாக, டாடா ஸெஸ்ட் மற்றும் டாடா ஜென்எக்ஸ் நானோ காரின் ஏஎம்டி மாடல்களை குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியும் என்று டாடா தெரிவித்துள்ளது.
டாடா ஜென்எக்ஸ் நானோ காரின் 40 சதவீத முன்பதிவுகள் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கு செய்யப்பட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த ஆண்டில் ஏஎம்டி கியர்பாக்ஸை உற்பத்தியை இந்தியாவிலேயே துவங்குவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








