கொஞ்சம் பெரிய நானோ... ஆல்ட்டோ போட்டியாளரை தயாரிக்க டாடா முடிவு
நானோ காருக்கு மேலான ரகத்தில் புதிய கார் மாடலை டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக பெரும் எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நானோ கார் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
ரூ.4,000 கோடி முதலீட்டில் குஜராத்தில் அமைக்கப்பட்ட நானோ கார் ஆலையிலும் உற்பத்தி மிக குறைவாக உள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இழப்பை தவிர்க்கும் விதமாக, புதிய கார் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறியீட்டுப் பெயர்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் X302 பிளாட்ஃபார்மில் பெலிக்கன் என்ற குறியீட்டுப் பெயரில் புதிய கார் மாடல் உருவாக்கப்படுகிறது. இந்த புதிய கார் மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

டீசல் மாடல்
நானோ காரின் டீசல் மாடல் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த திட்டத்தை கைவிடுவதாக டாடா தெரிவித்தது. இந்த நிலையில், புதிய கார் 1.0 லிட்டர் பெட்ரோல்எஞ்சின் மற்றும் 800சிசி டீசல் எஞ்சின் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிராண்டு
நானோவுக்கு கூடுதலான விலையில் நிலைநிறுத்தப்பட இருக்கும் புதிய குட்டிக் காரை புதிய பெயரில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

உற்பத்தி
குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில், நானோ காருடன் சேர்த்து இந்த புதிய கார் மாடலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ஏற்றுமதி
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வர இருக்கும் புதிய டாடா கார் மாடல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

சப்ளையர்களுக்கு தகவல்
நானோ காரை அறிமுகம் செய்யும்போது மாதத்திற்கு 12,000 கார்கள் என்ற விற்பனை இலக்கை டாடா நிர்ணயித்தது. அந்த இலக்கு பொய்த்து போனதையடுத்து, தற்போது விழிப்புடன் இலக்கு வைத்துள்ளது. அதாவது, புதிய காரை மாதத்திற்கு 2,500 கார்கள் என்ற விற்பனை இலக்கு வைத்து சப்ளையர்களுக்கு டாடா மோட்டார்ஸ் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சரியான இலக்காக இருக்கும் என சப்ளையர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications








