அடப்பாவமே... முதல் மாருதி 800 காருக்கு வந்த நிலைமைய பார்த்தீங்களா!!
இந்திய கார் மார்க்கெட்டின் தலைவிதியை மாற்றி எழுதிய பெருமை மாருதி 800 காரையே சேரும். விற்பனையில் பல லட்சங்களை தொட்டு இமாலய சாதனைகளை படைத்த அந்த காரின் உற்பத்தி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், பல்வேறு பெருமைகளுக்கும், சாதனைகளையும் படைத்த மாருதி 800 பிராண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரின் இப்போதைய நிலை தெரியுமா? அத ஸ்லைடர்ல வந்து பாருங்க!

அனாதையாக...
முதல் மாருதி 800 காரின் உரிமையாளரான ஹர்பால்சிங் 2010ம் ஆண்டு காலமானார். அடுத்த இரு ஆண்டுகளில் அவரது மனைவி குல்ஷன்பீர் கவுரும் மரணமடைந்தார். அவர்களது மறைவுக்கு பின் போதிய பராமரிப்பு இல்லாமல், துருப்பிடித்த நிலையில், ஓர் அனாதை போல சாலையில் நிறுத்தப்பட்டிருக்கிறது முதல் மாருதி 800 கார்.

பராமரிப்பு இல்லை
டெல்லி க்ரீன் பார்க் பகுதியிலுள்ள ஹர்பால்சிங் வீட்டின் அருகே தெருவில் அந்த மாருதி 800 நிறுத்தப்ட்டிருக்கிறது. ஹர்பால்சிங்கின் இரண்டு மகள்களும் தற்போது டெல்லியின் வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். எனவே, இந்த காரை எடுத்து செல்ல இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிர்ஷ்டசாலி
முதல் மாருதி 800 காருக்கு முன்பதிவு செய்திருந்த பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மத்தியில், அந்த காரை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டவர் ஹர்பால் சிங். அவருக்கு மற்றொரு அதிர்ஷ்டமும் அடித்தது. அது என்ன தெரியுமா?
[படத்தில் ஹர்பால்சிங்கின் மகளும், மருமகனும்]

பிரதமரின் கையால்...
1983ம் ஆண்டு டிசம்பர் 14ந் தேதி அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கையால் தனது மாருதி 800 காரின் சாவியை ஹர்பால் சிங் பெற்றார். இது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று ஹர்பால் சிங் மகள்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்த காரை குடும்ப உறுப்பினராகவே பாவிப்பத்து வந்ததாகவும் அவர்கள் கூறினர்.

வேண்டுகோள்
இந்த காரை மாருதி நிறுவனமோ அல்லது பிற கார் ஆர்வலர்களோ எடுத்து புனரமைத்து மியூசியத்தில் வைக்க வேண்டும் என்று ஹர்பால் சிங்கின் மகள்கள் மற்றும் அவரது மருமகன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், மாருதி 800 கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஆண்டு, 5ம் ஆண்டு மற்றும் 10 ஆண்டு வெற்றிக்கொண்டாட்டங்களுக்காக இந்த காரை மாருதி நிறுவனத்தால் பயன்படுத்தியதாகவும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

புரட்சிகர மாடல்
அம்பாசடரும், ஃபியட் மாடல்களும் கோலோய்ச்சிய நிலையில், மாருதியின் முதல் காராக வந்த மாருதி 800 இந்திய கார் மார்க்கெட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதியது. அந்த கார்களை ஒப்பிடும்போது மிக சிறப்பான மைலேஜ் கொடுத்ததால், பல வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு இந்த காருக்கு மாறினர்.

அறிமுகம்
1983ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை உற்பத்தி செய்யப்பட்டது. முதல் தலைமுறை மாடல் 1979 சுஸுகி ஃப்ரண்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த காரில் 40 எச்பி பவரை வழங்கும் திறன் கொண்ட 796சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இதன் டாப் ஸ்பீடு 130 கிமீ.

முதல் காரின் விலை
முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.47,500 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், முதல் மாருதி 800 காரின் உரிமையாளரான ஹர்பால்சிங்கிடம் சிலர் அணுகி அந்த காரை ஒரு லட்சம் ரூபாய் வரை தருவதற்கு விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அந்த காரை விற்பனை செய்ய அவர் மறுத்துவிட்டார். ஆனால், அவர் சென்றபின் அந்த காரின் நிலைமை தற்போது கேட்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பெரும் விற்பனை
30 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்தது. மொத்தம் 2.87 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.அதில், 2.66 மில்லியன் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. மீதமுள்ளவை ஏற்றுமதி செய்யப்பட்டன. ஹிந்துஸ்தான் அம்பாசடர் காருக்கு அடுத்ததாக அதிக அளவில் இந்தியாவில் விற்பனையான மாடல் மாருதி 800.

விற்பனை நிறுத்தம்
கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் சென்னை, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாக விற்பனை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், சந்தைப்போட்டி காரணமாக புதிய மாருதி ஆல்ட்டோ 800 காரை மாருதி இதற்கு மாற்றாக அறிமுகம் செய்து இந்த காருக்கு விடைகொடுத்தது.
Photo Source: ANI Via Youtube


Click it and Unblock the Notifications








