எம்- ஸீரோ... இந்தியாவின் முதல் சூப்பர் கார் பற்றிய 12 முக்கிய விஷயங்கள்!
வல்லரசு என்ற பெருங்கனவை இலக்காக கொண்டு பயணித்து வரும் நம் நாட்டில், மோட்டார் வாகன துறையின் உயரிய இலக்குகள் இன்னமும் எட்டப்படாமலே இருக்கின்றன. புல்லட் ரயிலும், சூப்பர் கார் தயாரிப்பிலும் பல நாடுகள் பல உச்சங்களை தொட்டுவிட்ட நிலையில், அதற்கான ஆரம்பநிலை கட்டமைப்புகள் கூட, நம் நாட்டில் இன்னமும் ஏற்படவில்லை.
இந்தநிலையில், மீன் மெட்டல் மோட்டார்ஸ்[Mean Metal Motors] என்ற நிறுவனம் இந்தியாவின் முதல் சூப்பர் காரை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. எம்- ஸீரோ என்ற பெயரில் தயாராகும் இந்த புதிய சூப்பர் கார் பற்றிய சில முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன் டீம்
இந்த சூப்பர் காரை இந்தியா உள்பட 4 நாடுகளை சேர்ந்த குழுவினர் இணைந்து தயாரிக்கின்றனர். மொத்தம் 25 பேர் இணைந்து இந்த காரை தயாரிக்கின்றனர்.

வடிவமைப்புப் பணிகள்
போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலியை சேர்ந்த பொறியாளர் குழுவினர் எம்- ஸீரோ சூப்பர் காரின் பாடி மற்றும் டிசைன் பொறுப்புகளை ஏற்றிருக்கின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்திய குழுவினர் எஞ்சின், கியர்பாக்ஸ், ஏரோடைனமிக்ஸ், காரின் எலக்ட்ரானிக்ஸ், ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்றனர்.

இலகு எடை
எம்- ஸீரோ சூப்பர் காரில் இலகு எடை கொண்ட கார்பன் ஃபைபர் மோனோகாக் டப் சேஸீ பயன்படுத்தப்பட உள்ளது. இது மிகுந்த உறுதித்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த உதிரிபாகங்கள் வடிவமைத்த பின்னர், பல்வேறு நிறுவனங்களிடம் தயாரிப்பு பணிகள் வழங்கப்பட உள்ளது.

ஏஎம்ஜி எஞ்சின்
இந்த கார் மிட் எஞ்சின் லே அவுட் அமைப்பு கொண்டதாக இருக்கும். அதாவது, இருக்கைக்குக்கு பின்னால் மையப்பகுதியில் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன், எலக்ட்ரிக் மோட்டாரும் இணைந்து கூடுதல் சக்தியை வழங்கும் என்பதால், ஹைபிரிட் சூப்பர் கார் மாடலாக உருவாகிறது.

எஞ்சின் விபரம்
மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டின் எஞ்சினை சப்ளை பெற்று பொருத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், இந்த காரில் 4.0 லிட்டர் ஏஎம்ஜி வி8 பை- டர்போ எஞ்சின் அல்லது 4.8லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதேநேரத்தில், 500 பிஎச்பி., சக்திக்கும் அதிகமான திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்சினை பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

சக்திவாய்ந்த மின்மோட்டார்
இந்த காரில் 250 பிஎச்பி பவரை அளிக்க வல்ல அதிசக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

பேரலல் ஹைபிரிட் மாடல்
இது பேரலல் ஹைபிரிட் சிஸ்டத்தில் இயங்கும் கார் என்பதால், பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் சேர்ந்து இயங்கும். எனவே, பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் ஒரே நேரத்தில் இயங்கும்போது, அதிகபட்சமாக 750 பிஎச்பி பவரை அளிக்கவல்லதாக இருக்கும்.

பெரும் முதலீடு
இந்த காரை தயாரிப்பதற்கு பெருமளவு நிதி உதவி தேவைப்படுகிறது. வரும் நவம்பருக்குள் 7 மில்லியன் டாலர்கள் நிதி ஆதாரத்துடன் இந்த காரின் புரோட்டோடைப் மாடலை தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக மீன் மெட்டல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சர்தக் பால் கூறியிருக்கிறார்.

புரோட்டோடைப் மாடல்
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் புரோட்டோடைப் மாடல் தயாராகிவிடும். அதன்பிறகு தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு 30 மில்லியன் டாலர் நிதி ஆதாரம் தேவைப்படும் என்று பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி
முதலில் ஐரோப்பாவில் இந்த சூப்பர் காரை தயாரிக்க பால் திட்டமிட்டிருந்தார். ஆனால், பெங்களூரில் ரேவா எலக்ட்ரிக் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு தனது முடிவை மாற்ற வைத்திருப்பதாகவும், எனவே, இந்த ஹைபிரிட் சூப்பர் காரை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விலை
ரூ.75 லட்சம் விலையில் இந்த புதிய சூப்பர் காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதாவது, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காருக்கு இணையான விலையில் இந்த சூப்பர் காரை நிலைநிறுத்த திட்டமிட்டு இருப்பதாக சர்தக் பால் கூறியிருக்கிறார்.

நவீன தொழில்நுட்பம்
பல முன்னணி சூப்பர் கார்களுக்கு சவால் விடும் வகையில், இந்த காரை மிக நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்க இருப்பதாக மீன் மெட்டல் மோட்டார்ஸ் நிறுவனர் சர்தக் பால் தெரிவித்துள்ளார். இந்த காரின் சஸ்பென்ஷன், எலக்ட்ரானிக்ஸ் என பல விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் என்றும் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications








