சிஇஎஸ் கண்காட்சியில் காருக்கான டாப் - 5 தொழில்நுட்பங்கள்!!
உலக அளவில் தொழில்நுட்ப வல்லமையை பரைசாற்றுவதற்கான சிறந்த தளமாக சிஇஎஸ் கண்காட்சி கருதப்படுகிறது. அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த 2015ம் ஆண்டு சிஇஎஸ் கண்காட்சியில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
மேலும், வருங்காலத்தில் எந்த மாதிரியான தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கப்போகிறது என்பதை அனுமானிக்கும் வகையில், இந்த கண்காட்சி அமைவதால், பார்வையாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கண்காட்சியில் கார் நிறுவனங்கள் மிக அதிக முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த நிலையில், இந்த கண்காட்சியில் இந்த ஆண்டு இடம்பெற்ற டாப் - 5 ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்களை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம்.

போட்டாப் போட்டி
சிஇஎஸ் கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் கார் நிறுவனங்களுக்கு இடையில் கடும் யுத்தம் நிலவியது. அதில், 5 சிறந்த தொழில்நுட்பங்களை காணலாம்.

1.உடல் அசைவு கட்டுப்பாட்டு நுட்பம்
தற்போதைய மொபைல்போன் மற்றும் திரைகளில் பயன்படும் தொடுதிரை கட்டுப்பாட்டின் அடுத்த தலைமுறை நுட்பமாக இதனை கூறலாம். திரையை தொடுவதற்கு பதிலாக, நம் விரல்கள் மற்றும் உடல்களின் அசைவு மூலம் சாதனங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமாக கூறலாம். வருங்காலத்தில் கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்களில் இந்த தொழில்நுட்பம் மூலம் புதிய புரட்சியை படைக்க வாய்ப்பு இருக்கிறது. இது கூடுதல் பாதுகாப்பையும் வழங்கும்.

2. லேசர் ஹெட்லைட்
சிஇஎஸ் கண்காட்சியில் மேம்படுத்தப்பட்ட லேசர் ஹெட்லைட் தொழில்நுட்பத்தை ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகியவை பார்வைக்கு கொண்டு வந்தன. சாதாரண ஹெட்லைட்டுகளைவிட பன்மடங்கு பிரகாசத்தையும், அதிக தூரத்திற்கு வெளிச்சத்தையும் வழங்கும். மேலும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கூச்சத்தை தராத வகையில், ஒளியின் அளவை தானே கட்டுப்படுத்திக் கொள்ளும். பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரில் இந்த லேசர் ஹெட்லைட் ஆப்ஷனலாக தரப்பட உள்ளது.

3.வயர்லெஸ் சார்ஜ்
ஸ்மார்ட்போனில் பரவலாக நாம் பயன்படுத்தும் வைஃபை வசதி போன்றே, எலக்ட்ரிக் கார்களில் வயரில்லாமல் சார்ஜ் செய்வதற்கான வசதியை அளிப்பதற்கான புதிய நுட்பத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது. இன்டஸ்ட்ரியல் வயர்லெஸ் சிஸ்டம் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எலக்ட்ரிக் காரை எளிதாக சார்ஜ் செய்ய முடியும். இந்த புதிய சார்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் பிஎம்டபிள்யூ ஐ8 காரின் ஹை வோல்டேஜ் பேட்டரியை 2 மணிநேரத்தில் சார்ஜ் செய்துவிட முடியும் என பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது.

4. கார் வாட்ச்
கையிலும், பாக்கெட்டிலும் கார் சாவியை வைக்க முடியாமல் தவிப்பவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு கார் நிறுவனங்கள் கைக்கடிகாரம் போல் கையில் அணிந்து கொள்ளும் ரிமோட் கன்ட்ரோல் சாதனத்தை இந்த ஆண்டு சிஇஎஸ் கண்காட்சியில் அறிமுகம் செய்தன. இந்த சாதனத்தின் மூலம் கார் கதவை பூட்டித் திறப்பது, கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது, ஏசியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும். ஹூண்டாய் கார் நிறுவனம் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்திருந்தது. பிஎம்டபிள்யூ ஐ3 காருக்குக்கூட இதேபோன்ற ஒரு சாம்சங் சாதனம் அறிமுகம் செய்தது.

5. தானியங்கி கார்
டிரைில்லாத கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஆட்டோமொபைல் உலகில் போட்டா போட்டி நிலவுவது தெரிந்ததே. . இந்த நிலையில், சிஇஎஸ் கண்காட்சியில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களுக்கான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன. ஆடி கார் நிறுவனம், டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி தொழில்நுட்பத்துடன் கூடி ஏ7 ஸ்போர்ட்பேக் காரை சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சோதனை செய்து கண்காட்சியில் அறிமுகம் செய்தது. மெர்சிடிஸ் பென்ஸ் எஃப்015 என்ற டிரைவரில்லா காரின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. 2030ம் ஆண்டுவாக்கில் உலக அளவில் டிரைவரில்லா கார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். மேலும், சாலைப் பாதுகாப்பும் மேம்படும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








