2014ல் மார்க்கெட்டிலிருந்து விடைபெற்ற புரட்சிக்கா(ர)ர்கள்!!
பொதுவாக, கார் மார்க்கெட்டில் புதிய மாடல்கள் வருகையையும், விற்பனைக்கு வந்ததில் வெற்றிகரமான மாடல்களையும் படிப்பதற்கு ஆவலாக இருப்பது உண்மை. ஆனால், இந்த செய்தித் தொகுப்பில் கடந்த ஆண்டு மார்க்கெட்டில் இருந்து விடைபெற்ற கார் மாடல்களை வழங்கியுள்ளோம்.
இந்திய கார் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய சில மாடல்களை நினைவு கூற இந்த செய்தித்தொகுப்பை வழங்குகிறோம். வேறு சில மாடல்கள் விடைபெறுவதை கேள்விபட்டவுடன் அடடா! என்று ஏங்க வைக்கும். அந்த மாடல்களை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

புரட்சிக்கா(ர)ர்கள்!
கார் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தியதாக கூறும் இரண்டு முக்கியமான மாடல்களுடன் இந்த செய்தித்தொகுப்பு துவங்குகிறது.

1.மாருதி 800
பழைய டிசைன் தாத்பரியங்களிலிருந்து கார் மார்க்கெட்டுக்கு புதிய அத்தியாயத்தை எழுதிய மாடல்தான் மாருதி 800. சுஸுகி நிறுவனத்தின் ஃப்ரண்ட் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த கார் 1983ல் இந்தியாவில் அறிமுகமானது. இந்த கார் அறிமுகமான பின்பு கார் மார்க்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. வாடிக்கையாளர்களின் எண்ணங்களையும், காரின் மதிப்பையும் வேறு கோணத்தில் கொண்டு செல்ல துவங்கியது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நின்ற இந்த மாடல் பல பிராண்டுகளில் புற்றீசல் புறப்பட்ட புதிய கார் மாடல்களுக்கு மத்தியில் நிலைத்து நின்றது.

5 மில்லியன் சாதனை
மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த மாடலின் உற்பத்தி கடந்த ஆண்டு ஜனவரி 23ந் தேதி கடைசி கார் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது. இந்த காரில் 37 பிஎச்பி பவரை அளிக்கும் 792சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் 2.66 மில்லியன் கார்களும், ஏற்றுமதியில் 2.87 மில்லியன் கார்களும் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

2. ஹிந்துஸ்தான் அம்பாசடர்
இந்திய கார் மார்க்கெட்டின் ஜாம்பவான் மாடல் அம்பாசடர்தான். அம்பி என்று அன்போடு அழைக்கப்படும் இந்த கார் பலரின் தம்பியாகவே வாழ்ந்தது எனலாம். பாமரன், பணக்காரன் வித்தியாசமின்றி, பட்டிதொட்டியெல்லாம் இதன் பாதம் படாத இடமே இல்லை என்றே கூறலாம். ஆம், அந்தளவு இந்தியர்களுடன் ஒன்றிப்போன, அம்பாசடர் காரின் உற்பத்தி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. 1957ம் ஆண்டு 16,000 ரூபாயில் விற்பனைக்கு வந்த அம்பாசடர், காரின் விற்பனை 1980களில் மிக உச்சத்தில் இருந்தது. மாதத்திற்கு, 24,000 கார்கள் என்ற வீதத்தில் விற்பனை இருந்தது குறிப்பிடத்தக்கது.

அம்பாசடரை விட்டால்...
பாதுகாப்பு அம்சங்கள், கிராஷ் டெஸ்ட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படும் பல புதிய கார் மாடல்கள் தோல்வி கண்டது குறித்த செய்திகளை எழுதும்போது, வாசகர்கள் ஆதங்கத்துடன் கருத்துப்பெட்டியிலும், மின் அஞ்சலிலும் அனுப்பும் தகவல் அம்பாசடருக்கு இணையாகுமா என்பதுதான். அந்தளவுக்கு உறுதியான கட்டமைப்பு, இடவசதி என அனைத்திலும் சிறப்பான கார் மாடல். இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற ஓர் கார் மாடலை உதாரணம் கூறுவதற்கு அம்பாசடரை விட்டால் இன்றளவும் ஓர் மாடல் இல்லை என்று அடித்து கூறலாம்.

மாருதி ஸென் எஸ்டீலோ
மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலான ஸென் காரின் வாரிசாக 2006ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஸென் எஸ்டீலோ, ஆல்ட்டோ காருக்கு மாற்றை தேடுபவர்களுக்கான மாடலாக மாருதி அறிமுகம் செய்தது. டால் பாய் டிசைன் தாத்பரியம் கொண்ட இந்த மாடல், ஸென் அளவுக்கு விற்பனையில் வெற்றி பெறவில்லை.

மாருதி ஏ ஸ்டார்
2008ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஏ ஸ்டார் இந்திய வாடிக்கையாளர்களை கவரவில்லை. சுஸுகியின் புதிய கே சீரிஸ் எஞ்சினுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடல். இந்தியாவில் இந்த கார் விற்பனையில் சோபிக்கவில்லை என்றாலும், இதனை முக்கிய ஏற்றுமதி மாடலாக மாருதி வைத்திருந்தது. வெளிநாடுகளில் ஆல்ட்டோ என்ற பிராண்டில் இந்த காரை சுஸுகி விற்பனை செய்து வந்தது. ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா, அதனை உணர்ந்து கொண்டு ஏ ஸ்டாருக்கு குட்பை சொல்லியதுடன், இதற்கு மாற்றாக மாருதி செலிரியோ காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. ஸென் எஸ்டீலோ மற்றும் ஏ ஸ்டார் கார்களால் புண்ணியமில்லாமல் இருந்த அந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்ட செலிரியோ தற்போது மாருதியின் வெற்றிகரமான மாடலாக பெயரெடுத்துள்ளதுடன், விற்பனையிலும் அசத்தி வருகிறது.

மாருதி எஸ்எக்ஸ்- 4
2007ல் பலேனோ காருக்கு மாற்றாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி எஸ்எக்ஸ்4 காரின் உற்பத்தியும் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த மாடலான எஸ்எக்ஸ்4, ஹூண்டாய் வெர்னா காரின் வருகையால், விற்பனையில் பின் தள்ளப்பட்டது. இந்த நிலையில், எஸ்எக்ஸ்-4 காருக்கு மாற்றாக புதிய சியாஸ் காரை மாருதி விற்பனைக்குவிட்டுள்ளது. இந்த கார் விற்பனையில் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

கைகோர்த்த ஸ்பார்க், சான்ட்ரோ
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய கார் மார்க்கெட்டிலிருந்து திடீரென விலகிய மாடல்கள் செவர்லே ஸ்பார்க் மற்றும் ஹூண்டாய் சான்ட்ரோ. ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியாவில் அஸ்திவாரம் அமைத்து கொடுத்த மாடல் சான்ட்ரோ. டோணியின் ஓய்வு முடிவு போலவே கடைசி வரை நல்ல பெயருடன், சிறப்பான விற்பனை எண்ணிக்கையுடன் மார்க்கெட்டிலிருந்து விலகிக் கொண்டுள்ளது. எந்த காருக்கும் இல்லாத மதிப்பு இந்த காருக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டில் இருப்பதை காணலாம். ஆனால், செவர்லே ஸ்பார்க் கார் விற்பனையில் ரொம்பவே சொதப்பியதால், கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








