மனிதக் கழிவு எரிவாயுவில் இயங்கும் பஸ்... உ.பி.,யில் அறிமுகமாகிறது!
மனிதக் கழிவு மற்றும் உணவுக் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் மீத்தேன் வாயுவை கொண்டு இயங்கும் பஸ்சை பொது போக்குவரத்துக்கு திட்டத்தின் கீழ் இயக்குவதற்கு உத்தரபிரதேச அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டு உள்ளது.
முதல்முறையாக ஆக்ராவில் இந்த பஸ் இயக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுதலை வெகுவாக குறைக்கும் தொழில்நுட்பம் கொண்ட இந்த எரிவாயுவில் இயங்கும் பஸ் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இங்கிலாந்தில் அறிமுகம்
இதே தொழில்நுட்பத்திலான பஸ் இங்கிலாந்தின் பிரிஸ்டல் விமான நிலையத்திற்கும், பாத் நகருக்கும் இடையில் தற்போது இந்த பஸ் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும், ஸ்வீடன், இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளிலும் இந்த பஸ் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆக்ரா ஏன்?
நாட்டின் அதிக கழிவுகளை வெளியேற்றும் நகரங்களில் ஒன்றாக ஆக்ரா இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 320.75 மில்லியன் லிட்டர் அளவுக்கு கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. தவிரவும், 750 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. எனவே, மீத்தேன் வாயு தயாரிக்க தேவையான கழிவுகளை அந்த நகரிலிருந்து எளிதாக பெறும் வாய்ப்பு இருப்பதால், அந்த நகரை தேர்வு செய்துள்ளதாக உத்தரபிரதேச அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.

ஸ்கானியா ஆர்வம்
மனிதக் கழிவில் இயங்கும் பஸ்களை அளிக்க ஸ்வீடனை சேர்ந்த ஸ்கானியா முன்வந்துள்ளது. மேலும், இயக்குதல், பராமரித்தல், ஓட்டுனர் சம்பளம், எரிபொருள் செலவீனம் போன்ற அனைத்தையும் ஸ்கானியா நிறுவனமே ஏற்க உள்ளது. இதற்காக, ஒரு கிலோமீட்டருக்கு 60 முதல் 75 ரூபாய் வரை ஸ்கானியாவுக்கு வழங்கப்படும் என்று உ.பி., அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது.

இருக்கை வசதி
இந்த பஸ்களில் 40 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியை கொண்டிருக்கும்.

ரேஞ்ச்
நகரப் பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த பஸ்களை பயன்படுத்த முடியும். ஒரு முறை முழுமையாக எரிவாயு நிரப்பினால் 300 கிமீ வரை இந்த பஸ்கள் செல்லும். பஸ்சின் கூரைப் பகுதியில் எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

மீத்தேன் எரிவாயு
5 பேரிடமிருந்து ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் மனிதக் கழிவு மூலமாக இந்த பஸ்சிற்கு ஒரு முறை முழுமையாக எரிவாயுவை நிரப்ப முடியும். அதேபோல, ஒரு நபரிடமிருந்து ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் உணவுக் கழிவு மற்றும் மனிதக் கழிவு மூலம் 55 கிமீ தூரத்திற்கு பஸ்சை இயக்க முடியும்.

அறிமுகம் எப்போது?
இந்த ஆண்டு இறுதியில் இந்த மனிதக் கழிவில் இயங்கும் பஸ்களை இயக்குவதற்கு உத்தரபிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகமும், ஸ்கானியா நிறுவனமும் திட்டமிட்டுள்ளன. மேலும், அம்மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் இந்த பஸ்களை இயக்கும் திட்டமும் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications








