ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடியை அம்பலப்படுத்திய குழுவில் ஒருவர் தமிழர்!
ஆட்டோமொபைல் உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எமிசன் மோசடியை திறம்பட கண்டறிந்த மூவர் குழுவில் தமிழகத்தை இளம் பொறியாளர் ஒருவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு குழுமங்களில் ஒன்றான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தான் விற்பனை செய்த டீசல் கார்களின் மோசடியான தகவல்களை தரும் எமிசன் சாஃப்ட்வேரை பயன்படுத்தியது சமீபத்தில் அம்பலமானது.

ஆய்வக சோதனை நிலைகளில் குறைவாக எமிசன் அளவை காட்டும் வகையில், அந்த சாஃப்ட்வேரை ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியுள்ளது. ஆனால், அந்த சாஃப்ட்வேர் கொண்ட காரை சாதாரணமாக வெளியில் பயன்படுத்தும்போது, ஆய்வக சோதனை நிலைகளைவிட 15 முதல் 35 மடங்கு வரை அதிகமாக புகையை வெளியிடும் தன்மை கொண்டதாக இருந்துள்ளது.
இந்த சாமர்த்தியமான மோசடியை, மேற்கு வெர்ஜீனியா பல்கலைகழகத்தின் மாற்று எரிபொருள், எஞ்சின் மற்றும் எமிசன் மையத்தை சேர்ந்த மூவர் குழுவினர் கண்டறிந்தனர். இந்த மூவர் குழுவில் தமிழகத்தை ஆராய்ச்சி பொறியாளர் அரவிந்த் திருவேங்கடம் முக்கிய பங்காற்றியுள்ளார்.
2004ம் ஆண்டு சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அரவிந்த் திருவேங்கடம், தற்போது அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா பல்கலைகழகத்தில்துணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் டேனியல் கார்டர், மார்க் பெஸ்ச் ஆகிய ஆராய்ச்சியாளர்களும் இணைந்துதான் இந்த மோசடியை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி குழுவினருக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர் மிருதுல் கவுதம். இவரும் இந்தியாவை சேர்ந்தவர்தான். டெல்லி ஐஐடி.,யில் பயின்றவர். தற்போது அமெரிக்காவின் நெவடா பல்கலைகழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையை, இந்த மோசடியின் மூலமாக 11 மில்லியன் கார்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த நாட்டில் விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.
அதேநேரத்தில், யூரோ-4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட டீசல் கார்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்தியாவில் இந்த மோசடி பிரச்னையால் பாதிப்பு ஏற்படாது என்று கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்ட கார்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








