இந்தியாவில் 3.23 லட்சம் டீசல் கார்களை திரும்ப அழைக்கிறது ஃபோக்ஸ்வேகன் குழுமம்
இந்தியாவில், ஃபோக்ஸ்வேகன், ஆடி, ஸ்கோடா ஆட்டோ ஆகிய மூன்று கார் பிராண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட 3.23 லட்சம் டீசல் கார்களை ஃபோக்ஸ்வேகன் குழுமம் திரும்ப அழைக்க இருக்கிறது.
மாசு அளவை குறைத்துக் காட்டும் மோசடியான சாஃப்ட்வேரை டீசல் கார்களில் பொருத்தி பெரும் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் சிக்கி தவிக்கிறது.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் பல லட்சம் டீசல் கார்களில் இந்த மோசடி சாஃப்ட்வேரை பொருத்தி ஃபோக்ஸ்வேகன் குழுமம் விற்பனை செய்துள்ளது. இதனால், அளவுக்கு அதிகமான தீங்கு விளைவிக்கும் வாயுக்களை ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்கள் வெளியிடுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவிலும் மாசு அளவை குறைத்துக் காட்டும் அந்த மோசடி சாஃப்ட்வேரை டீசல் கார்களில் ஃபோக்ஸ்வேகன் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு நடத்திய விசாரணையில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மோசடி அம்பலமாகியிருக்கிறது.
இதையடுத்து, 2008ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை தயாரிக்கப்பட்ட 3.23 லட்சம் கார்களை இந்தியாவில் தானாக முன்வந்து திரும்ப அழைக்க ஒப்புக்கொண்டிருக்கிறது ஃபோக்ஸ்வேகன் குழுமம்.
இந்தியாவில், ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் விற்பனை செய்யப்பட்ட 1,98,500 டீசல் கார்களும், ஸ்கோடா பிராண்டில் விற்பனை செய்யப்பட்ட 88,700 டீசல் கார்களும், ஆடி பிராண்டில் விற்பனை செய்யப்பட்ட 36,500 சொகுசு கார்களும் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன.
மொத்தமாக, இந்தியாவில் 3.23 லட்சம் டீசல் கார்கள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் EA-189 டீசல் எஞ்சின் வரிசையை சேர்ந்த 1.2 லிட்டர், 1.5 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் ஆகிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்கள் திரும்ப அழைக்கப்பட்டு, மோசடி சாஃப்ட்வேரை நீக்கிவிட்டு, புதிய தீர்வு அளிக்க இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications








