எலெக்ட்ரிக் காராக மாறுகிறது பென்ட்லி முல்சேன்...!!
பிரிட்டனைச் சேர்ந்த பென்ட்லி நிறுவனத்தின் கார்களைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பார்ப்பவர்களை வியப்பின் உச்சத்தில் ஆழ்த்தும் பிரம்மாண்ட கிளாசிக் சொகுசு கார்கள் அவை.
பென்ட்லி நிறுவனத்தின் கார்கள் செம மெஜஸ்டிக்கானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சார்பு கம்பெனியான பென்ட்லியின் கார்களுக்கு உலக அளவில் டிமாண்ட் இருக்கிறது.

இந்த நிலையில், டீசல் எஞ்சின் மாசுக் கட்டுப்பாடு விவகாரத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வாங்கிய குட்டினைப் பார்த்த பிறகு, பென்ட்லி தற்போது உஷாராகிவிட்டது என்றே சொல்லாம்.
தனது நிறுவனத்தின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எஞ்சின்களை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார்களைப் பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.
பொதுவாகவே பென்ட்லி நிறுவன கார்களில் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் ஹேண்ட் பில்ட் எஞ்சின்களே பயன்படுத்தப்படுகின்றன.
இங்கிலாந்தில் உள்ள க்ருவே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. ஒரு எஞ்சினை கைகளால் உற்பத்தி செய்வதற்கு சுமார் 30 மணி நேரமாகும் என்று கூறப்படுகிறது.
கடந்த 1960-ஆம் ஆண்டிலிருந்தே இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், பென்ட்லி கார்களில் வி-8 டர்போ சார்ஜுடு எஞ்சின்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
பென்ட்லி முல்சேன் மாடலில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் 505 பிஎச்பி முறுக்கு விசையையும், 1,020 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. முல்சேன் ஸ்பீட் மாடல் காரின் எஞ்சின் 530 பிஎச்பி மற்றும் 1,100 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
உலக அளவில் பென்ட்லி நிறுவனத்துக்கு சீனா மிக முக்கியமான மார்க்கெட்டாகும். அங்கு பென்ட்லி கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் வாகனப் புகை கட்டுப்பாட்டு விதிகள் தற்போது சீனாவில் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதனால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை விற்பனை செய்ய சீன அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் பென்ட்லி கார்களில் டீசல் எஞ்சினுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார்களைப் பொருத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக முல்சேன் மாடல் கார்களில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படவுள்ளன. இதை அந்நிறுவனத்தின் வர்த்தப் பிரிவு பொது மேலாளர் ஹன்ஸ், ஆட்டோ கார் தளத்திடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதேவேளையில், முழுக்க முழுக்க அனைத்து கார்களிலும் எலெக்ட்ரிக் மோட்டார்களைப் பொருத்தும் எண்ணமில்லை என்றும், சீனாவில் அமலாகியுள்ள மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்காக அங்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் அத்தகைய நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








