புகாட்டி கேலிபர் கார் உற்பத்தி விரைவில் தொடக்கம்?
பிரான்ஸ் நாட்டின் தன்னிகரற்ற ஸ்போர்ட் கார் தயாரிப்பு நிறுவனம் புகாட்டி. உலக அளவில் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் அனைவராலும் வியந்து பார்க்கும் மாடல்களில் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்களும் உண்டு.
புகாட்டியின் சைரான், வெய்ரான் ஆகிய இரு மாடல்கள்தான் தற்போது மார்க்கெட்டில் உள்ளன. இரண்டுமே ஸ்போர்ட் மாடல் டைப். சைரானிலும் சரி, வெய்ரான் வேரியண்ட்களிலும் சரி இரண்டு டோர்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. செம ஸ்டைலிஷான நவீன தொழில்நுட்ப கார்கள் அவை.

அது சரி, கொஞ்சம் வசதியாக நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையிலான கார்கள் எதையும் புகாட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லையா? என்ற கேள்வி எழலாம். கடந்த 2013-ஆம் ஆண்டு முன்னரே கேலிபர் ரக கார் ஒன்றை வடிவமைத்து மார்க்கெட்டுக்குக் கொண்டு வர அந்நிறுவனம் தீவிர முயற்சி எடுத்தது. கேலிபர் ரகம் என்று நான்கு அல்லது ஐந்து டோர்கள் கொண்ட கார்கள். இந்த மாடல்களில் முன்பக்கம் எஞ்சின் கொடுக்கப்பட்டிருக்கும். பொதுவாக டொமஸ்டிக் (உள்ளூர் சாலைகளில் ஓட்டுவதற்கான மாடல்கள்) பயன்பாட்டுக்காக இந்த கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வேறு சில காரணங்களால் அந்தத் திட்டத்தை ஒத்திவைப்பதாக புகாட்டி நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இது கேலிபர் காரை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது. சில நாள்கள் அதைப் பற்றிப் பேசியவர்கள், அதை விட்டு விட்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.
இப்போது, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், மகிழ்ச்சியைத் தரும் வகையிலும் ஒரு சூசகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, கேலிபர் ரக காரைத் தயாரிக்கும் பணியில் விரைவில் புகாட்டி நிறுவனம் ஈடுபடப் போகிறது என்ற தகவலை அதன் தலைவர் உல்ஃப்கேங் டர்ஹெய்மர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்டோகார் வலைதளத்துக்கு அண்மையில் அளித்த பேட்டியில்தான் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, புகாட்டி நிறுவனத்துக்கு புதிதாக 4 செயல் திட்டங்களை வகுத்து வைத்திருப்பதாகக் கூறிய டர்ஹெய்மர், அவற்றில் ஒன்றுதான் கேலிபர் ரக கார் உற்பத்தி என்பதை பட்டும் படாமல் சொல்லியிருக்கிறார்.
அதேவேளையில், மீதமுள்ள மூன்று திட்டங்கள் குறித்து அவர் மூச்சு விடவில்லை. ஆட்டோகார் வலைதளத்தின் அனுமானத்தின்படி பார்த்தால், புகாட்டி நிறுவனம் எஸ்யூவி ரக கார் உற்பத்தியில் இறங்குவதும் அவற்றில் ஒரு திட்டம் எனத் தெரிகிறது.
மொத்தத்தில், பகாட்டி போன்ற பிரம்மாண்ட கார் நிறுவனங்கள் புதிதாக ஏதாவது ஓர் அறிவிப்பை வெளியிட்டாலே அது முக்கியச் செய்தியாக மாறிவிடுகிறது. அதிலும், எதிர்பார்த்து காத்திருந்த ஒரு மாடல் விரைவில் மார்க்கெட்டுக்கு வரலாம் என்ற ஊகத் தகவல்கள் வெளியானால் கேட்கவா வேண்டும்? ஆட்டோமொபைல் உலகில் அடுத்த சில நாள்களுக்கு இதுதான் பேச்சாக இருக்கப் போகிறது.


Click it and Unblock the Notifications








