பார்க்கிங் இருந்தால்தான் காருக்கு பதிவு: அடுத்த ஆப்புக்கு தயாராகும் மத்திய அரசு!
பார்க்கிங் இடம் இருப்பதற்கான உரிய அத்தாட்சி சான்றை காட்டினால் மட்டுமே, காரை பதிவு செய்ய அனுமதிப்பது என்ற புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கார் பார்க்கிங் என்பது நகர்ப்புறங்களில் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. சாலையோரங்களில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களால் வாகனப் போக்குவரத்தும், கட்டங்களின் வாயில் பகுதிகளிலும், குடியிருப்புகளிலும் பெரும் இடையூறும் ஏற்படுகிறது.
மறுபுறத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கமும், அவை வெளியிடும் புகையும் சுற்றுப்புறத்திற்கும் பெரும் தீங்கு ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கார் விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இனி பார்க்கிங் இடம் இருப்பதற்கான அத்தாட்சி சான்றை அளித்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில்," பார்க்கிங் இடம் இருப்பதற்கான அத்தாட்சி சான்றை அளித்தால் மட்டுமே இனி வாகனங்களை பதிவு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும், இதனை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடனும் ஆலோசித்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.

இந்த முடிவானது கார், இருசக்கர வாகன விற்பனையில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இந்த புதிய விதிமுறையை வாகன சந்தை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே உள்ள இதற்கான விதிமுறைகளில் மாற்றங்களை செய்ய வேண்டியது இருக்கும் என்றும், இந்த புதிய விதிமுறையை அமல்படுத்துவதுதான் கடினமானது என்றும் கூறியிருக்கின்றனர்.

இந்த விதிமுறையை மாநில போக்குவரத்து துறையும், இதர அரசுத் துறைகளும் இணைந்து அமல்படுத்த வேண்டியதிருக்கும். வாகனத்தை நிறுத்துவதற்கான இடம் குறித்து கொடுக்கப்படும் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அதன்பிறகு இடத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இடம் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னற், அதற்கான சான்று தர வேண்டியிருக்கும்.

இதற்காக, பிரத்யேக அரசு நிர்வாகத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஏற்கனவே பார்க்கிங் இடம் கட்டாயம் என்ற விதிமுறை இருந்தும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பிரத்யேக அமைப்பு இல்லாததே பிரச்னையாக இருக்கிறது.

இதற்கான விதிமுறைகளில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மாறுதல்களை செய்து வெளியிடுவதும் அவசியம் என்றும், இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதையும் அரசுத் துறையினர் சுட்டிக் காட்டி உள்ளனர்.

நடைமுறை சிக்கல்களை தாண்டி இந்த சட்டத்தை அமல்படுத்தினால், அது நிச்சயம் வரவேற்கத்தக்கதாகவே அமையும். ஆனால், இது நடைமுறைக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








