எமனாக மாறிய ஏர் பேக்.... பாதுகாப்பு சாதனமே உயிரைக் குடித்த துயரம்
ஆபத்பாந்தவனாக விளங்க வேண்டிய ஏர்-பேக்-களே உயிருக்கு எமனாய் வந்தால் என்ன செய்வது?
அப்படியாக ஒரு சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடந்தது. தனது ஹோண்டா சிவிக் காரில் ஏறி உற்சாகப் பயணம் மேற்கொள்ள நினைத்த ஒரு பெண்ணின் உயிரையே குடித்ததுவிட்டது ஏர்-பேக். ஆம், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்டிருந்த ஏர்-பேக் திடீரென வெடித்ததில் அந்தப் பெண் பலத்த காயமடைந்து உயிரழந்தார்.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்புதான் ஹோண்டா நிறுவனத்தின் மலேசிய யூனிட், தங்களது 1,45,000 கார்களில் குறைபாடுடன் பொருத்தப்பட்டிருந்த ஏர் பேக்-களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.
உலகம் முழுவதும் இதே போன்று பல்வேறு கார்களில் ஏர் பேக் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவங்களில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுசரி எதனால் இத்தகைய விபத்துகள் நிகழுகின்றன?
காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஏர் பேக்-கள் அதிக அழுத்தம் மற்றும் உந்துவிசை காரணமாக திடீரென வெடித்து விடுகின்றன. அப்போது முறையாக ஏர் பேக் வெளிவராமல் ஓட்டுநர் மீது அதிக வேகத்தில் மோதுவதால் உயிருக்கே அது ஆபத்தாக முடிந்து விடுகிறது.
மலேசிய சம்பவத்திலும் இதுதான் நடந்தது. பென்ஸ் கார் ஒன்றுடன் அந்தப் பெண் ஓட்டி வந்த ஹோண்டா சிவிக் மோதி சிறிய விபத்துக்குள்ளானது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக ஏர் பேக் வெடித்ததில் அவர் உயிரிழந்தார்.
டகாட்டா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம்தான் இந்த ஏர் பேக்-களை கார் நிறுவனங்களுக்கு விநியோகிக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற விபத்து சம்பவங்களால் விநியோகிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ஏர் பேக்-களை திரும்பப் பெறும் நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக பொருத்தப்படும் சாதனங்கள் நம்மை காக்க வேண்டுமே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமையக் கூடாது. இந்த சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்தால் ஆபத்து அவர்களுக்கும்தான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








