எலெக்ட்ரிக், ஹைபிரிட் வாகனங்கள் மூலம் ரூ.60,000 கோடிக்கு எரிபொருள் சேமிக்கலாம்...
நாட்டின் ஏற்றுமதியை விடக் குறைவாகவோ அல்லது அதற்கு நிகராகவோ இறக்குமதி இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி விகிதம் அதிகரித்தால் அதை நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்று கூறுவார்கள்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கிறது. ஆண்டொன்றுக்கு ஆயிரம் டன்னுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்டு வந்த தங்கத்தின் பயன்பாட்டைக் குறைக்க எண்ணிய மத்திய அரசு, அதற்கு பதிலாக பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அறிவித்தது.

ஆனால், அதைக் காட்டிலும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் பயன்பாட்டைக் குறைக்க எந்த வழியும் இல்லாமல் விழிபிதுங்கி இருந்தது அரசு. இந்த நிலையில்தான், எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் (பேட்டரி அல்லது எரிபொருளில் இயங்கும் வாகனம்) கார்கள், மோட்டார் சைக்கிள்களைத் தயாரிப்பதற்கான ஃபேம் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு ஊக்கத் தொகையும், பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் அந்த வகையான வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும், பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தேவை குறையும் என்றும் அரசு திட்டமிட்டது.
தற்போது மார்க்கெட்டில் உள்ள மகேந்திரா ரெவா இ - 20 (எலெக்ட்ரிக்), டொயோட்டா கேம்ரி, பிஎம்டபிள்யூ ஐ-8 சூப்பர் கார், மாருதி சியாஸ் (மூன்று ஹைபிரிட் மாடல்கள்), ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகியவை அந்த தொழில்நுட்பத்தில் உருவானவைதான்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீத், எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களால் ஆண்டுக்கு ரூ.60,000 கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அந்த வகை வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.29 ஆயிரமும், காருக்கு ரூ. 1.38 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
எரிபொருள் சிக்கனம் ஒரு புறம் இருந்தாலும், இந்த வகை வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவது வெகுவாகக் குறையும் என்பது உறுதி. இந்த தொழில்நுட்பத்துக்கு மாற மக்களும் தயாராக இருக்கும் பட்சத்தில் அரசின் எண்ணம் ஈடேறுவது திண்ணம்.


Click it and Unblock the Notifications








