இந்தியாவில் பஸ், டிரக்குகளை களமிறக்கும் ஹூண்டாய்!
பஸ், டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான ஆய்வுப் பணிகளை ஹூண்டாய் இறங்கியிருக்கிறது.
நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம் ஹூண்டாய் மோட்டார்ஸ். இந்தியர்களின் மனம் கவர்ந்த பிராண்டாக மாறியிருக்கும் ஹூண்டாய் அடுத்ததாக, தனது கீழ் செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதற்கடுத்து, தனது பஸ் மற்றும் டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆய்வுப் பணிகள்
பஸ், டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த ஆய்வுப் பணிகளை ஏற்கனவே ஹூண்டாய் நடத்தி வருகிறது. மேலும், இந்த வர்த்தகத்தை துவங்குவதற்கு அதிக முக்கியத்துவமும் அளித்து வருகிறது.

முதலில் பஸ்
முதலில் தனது பஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாம். அதற்கடுத்து, டிரக்குகளையும், இலகு வகை வர்த்தக வாகனங்களையும் கொண்டு வர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நீண்ட பாரம்பரியம்
கடந்த 1978ம் ஆண்டு பஸ் தயாரிப்புடன் வர்த்தக வாகன சந்தையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இறங்கியது. 1984ம் ஆண்டு முதல் டிரக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தென்கொரியோ, துருக்கி மற்றும் சீனாவில் ஹூண்டாய் கனரக வாகன தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

புதிய இலக்கு
அடுத்ததாக, தற்போது இந்திய வர்த்தக வாகன மார்க்கெட்டை குறிவைத்து இறங்க உள்ளது. உலக அளவில் 130 நாடுகளில் வர்த்தக வாகனங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. ஆண்டுக்கு 1,00,000 வர்த்தக வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

முக்கிய மார்க்கெட்
இந்த நிலையில், இந்த எண்ணிக்கையை வெகுவாக உயர்த்திக் கொள்வதற்கு இந்தியா சிறந்த மார்க்கெட்டாக இருக்கும் என்று ஹூண்டாய் கருதுகிறது. 1998ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் கார் வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்தபோதிலும், இந்தியாவில் வர்த்தக வாகன துறையில் ஹூண்டாய் களமிறங்குவதை தவிர்த்து வந்தது.

ஆசை
ஆனால், வால்வோ, பாரத் பென்ஸ், ஸ்கானியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் சிறப்பான வர்த்தகத்தை செய்து வருவதை பார்த்து, ஹூண்டாய் நிறுவனத்திற்கும் தற்போது வர்த்தக வாகன மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளது.

விரைவில் முடிவு
ஆய்வுப் பணிகளின் அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பஸ் விற்பனையை துவங்குவது குறித்து விரைவில் ஹூண்டாய் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியும் இலகு வகை பிக்கப் டிரக்குடன் வர்த்தக மார்க்கெட்டில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








