டிரக்குகளுக்கு மின் நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு திட்டம்!
ஸ்வீடன் நாட்டு ஒத்துழைப்புடன் டிரக்குகளுக்கான மின் நெடுஞ்சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் மரபுசார் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கு, திடமான தீர்வு காண்பதற்கு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முழு வீச்சில் களமிறங்கி உள்ளது.
குறிப்பாக, நம் நாட்டு நெடுஞ்சாலைகளில் செல்லும் டிரக்குகளால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அதிக எரிபொருள் இழப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், டிரக்குகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கையிலெடுத்துள்ளது.

அதாவது, டிரக்குகளுக்கான பிரத்யேக மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸ்வீடன் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மின் மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை அமைப்பதற்காக ஸ்வீடன் நாட்டு அமைச்சர் மைக்கேல் டேம்பெர்க் தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கட்காரி கூறியிருக்கிறார். மேலும், நெடுஞ்சாலை அமைத்து தருவதற்கான வரைவு ஒன்றையும் கேட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

டிரக்குகளுக்கான பிரத்யேக மின்மயமாக்கப்பட்ட உலகின் முதல் நெடுஞ்சாலை சில மாதங்களுக்கு முன் ஸ்வீடனில் திறக்கப்பட்டது. சீமென்ஸ் நிறுவனமும், ஸ்கானியா நிறுவனமும் இணைந்து இந்த பிரத்யேக மின் நெடுஞ்சாலை கட்டமைப்பை அமைத்துள்ளன.

மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் போன்றே, இந்த மின் நெடுஞ்சாலைகளில் கம்பங்கள் மூலமாக மின் கம்பி வடங்கள் இணைக்கப்பட்டிருக்கும். அதனை டிரக்குகளின் ஜீப் கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் பான்டோகிராஃப் தொட்டுக் கொண்டே செல்லும்.

தற்போது 2 கிமீ தூரத்துக்கு மட்டுமே இந்த மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை சோதனை முயற்சியாக அமைத்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மின் மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையில் செல்லும்போது, டிரக்குகளுக்கான எரிபொருள் பயன்பாடு கணிசமாக குறையும். அத்தோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும்.

மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் செல்லும் டிரக்குகளில் ஹைபிரிட் வகை எரிபொருள் நுட்பத்தை பெற்றவை. அதாவது, மின்சார கம்பங்கள் இல்லாத பகுதிகளில் டீசல் எஞ்சினில் வழக்கமாக இயங்கும். எனவே, இது எளிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வாய்ப்புள்ளது.

ஸ்வீடனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் இதுபோன்றதொரு மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையை சீமென்ஸ் நிறுவனம் அமைத்து வருகிறது. இந்த மின் நெடுஞ்சாலை இந்தியாவில் அமைக்கப்பட்டால், அது பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

நெடுஞ்சாலைகளில் டிரக்குகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்பதுடன், மின்சாரத்தில் இயங்குவதால் டீசல் நுகர்வும் வெகுவாக குறையும். குறிப்பாக, கனரக வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications








