அடிக்கடி பழுதாகும் மிட்சுபிஷி பஜேரோ... கடுப்பில் ராணுவ அதிகாரிகள்...
இந்திய பாதுகாப்புப் படையினர் எல்லைக் கோட்டுப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப் பயன்படுத்துவது ஒரு சில வாகனங்களை மட்டுமே. அவற்றில் ஒன்று மிட்சுபிஷி பஜேரோ. கரடு முரடான சாலைகளிலும், மலைச் சரிவுகளிலும், பனி பொழிந்த பாறைகளிலும் செல்வதற்கு ஏதுவான வாகனங்கள் மட்டுமே ராணுவப் பயன்பாட்டில் இருக்கும்.
அப்படி தரமான ஜீப்கள், எஸ்யூவி மாடல் கார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லைக் கோட்டு ரோந்துப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பப்பட்ட வாகனங்களில் தற்போது மிட்சுபிஷி பஜேரோ மாடல்கள் பல சரிவரச் செயல்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய இந்திய - சீன எல்லைப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட பஜேரா வாகனங்களில் மூன்று பழதடைந்ததாக கொல்கத்தாவில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு அனுப்பப்பட்டன.
அவற்றில் இரண்டு கார்ளை கிழக்கு பிராந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிரவீண் பக்ஷி பயன்படுத்தி வந்தார். பஜேரோ வாகனத்தில் ஏற்படும் இத்தகைய பிரச்னைகள் ராணுவ அதிகாரிகளை சலிப்படையச் செய்திருக்கிறதாம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மிட்சுபிஷி நிறுவன நிர்வாகிகள், பொதுவாகவே பஜேரோ வாகனங்கள் எந்தச் சூழலிலும் இயங்கும் திறன் கொண்ட எஸ்யூவி கார்கள் என்று தெரிவித்தனர். ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ஓரிரு கார்களைத் தவிர பிற வாகனங்கள் எதிலும் பெரிய அளவில் புகார்கள் வந்ததில்லை என்றும் அவர்கள் கூறினர்.
ராணுவப் பயன்பாட்டில் இருக்கும் ஜீப்களில் அதிக அளவு மண்ணெண்ணெய் கலந்த டீசலே பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே அந்த வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய கலப்பு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவ அதிகாரிகளிடம் மிட்சுபிஷி நிர்வாகிகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. நாட்டைக் காக்கும் பாதுகாப்புப் படையினர், தங்கள் வாகனத்தை சரியாகப் பராமரிப்பது அவர்களது கடமைகளில் ஒன்று. அதேபோல், ராணுவத்துக்குத் தயாரிக்கப்படும் வாகனங்கள் வழக்கமானதைக் காட்டிலும் அதிக உறுதித் தன்மையுடன் இருத்தல் அவசியம் என்பதை சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








