டிரைவரில்லாமல் இயங்கும் டாடா நானோ கார்: சாஃப்ட்வேர் எஞ்சினியர் அசத்தல்!
டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை வடிவமைப்பதில், உலகின் ஜாம்பவான் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், ஆப்பிள் மற்றும் டொயோட்டா என ஒரு பெரும் பட்டாளமே பல மில்லியன் டாலர்களை கொட்டி ஆராய்ச்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில், டிரைவரில்லாமல் இயங்கும் டாடா நானோ கார் ஒன்றை சத்தமில்லாமல் வடிவமைத்து அசத்தியிருக்கிறார் கொச்சியை சேர்ந்த மென்பொருள் வல்லுனர் ரோஷி ஜான் மற்றும் அவரது குழுவினர். இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மென்பொருள் வல்லுனர்
கொச்சியை சேர்ந்த ரோஷி ஜான் டிசிஎஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆபிஸ் உண்டு, வீடு உண்டு என்று இருந்த ஜானுக்கு டிரைவரில்லாமல் இயங்கும் காரை வடிவமைக்கும் உந்துததல் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

காரணம்...
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விமான நிலையத்திலிருந்து ஜான் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற டாக்சி ஓட்டுனர் மிகவும் சோர்வாகவும், தூங்கி வழிந்தபடி காரை ஓட்டியுள்ளார். அவர் ஓய்வில்லாமல் இருப்பதை அறிந்து கொண்டு டாக்சியை ஜானே ஓட்டிச் சென்றுள்ளார்.

உந்துதல்...
அப்போதுதான், இதுபோன்ற நேரங்களில் விபத்தை தவிர்க்க கார்களில் ஆட்டோ பைலட் சிஸ்டம் இருப்பது அவசியம் என்று அவர் யோசித்துள்ளார். அதன்படி, சொந்தமாகவே ஆட்டோபைலட் சிஸ்டம் உடைய கார்களை உருவாக்க அவர் முனைந்திருக்கிறார். இதற்கு ஒத்துழைப்பாக சிலரையும் சேர்த்துக் கொண்டு டாடா நானோ காரில் ஆட்டோ ஃபைலட் சிஸ்டம் கொண்டதாக மாற்றியிருக்கின்றனர்.

நானோ ஏன்?
இந்த திட்டத்திற்காக பல கார்களை பட்டியலிட்டு ஆய்வு செய்தனர். முடிவில் டாடா நானோவை தேர்வு செய்தனர். விலை மலிவான கார் என்பது முக்கிய விஷயமில்லை. நானோ கார் பின்புற எஞ்சின் அமைப்பு கொண்டது. இதனால், எளிதாக ஆட்டோ பைலட் சிஸ்டத்திற்கான சாதனங்களை பொருத்த முடியும் என்பதற்காகவே டாடா நானோ காரை தேர்வு செய்துள்ளார்.

வசதி
நானோ காரில் பின்புறம் எஞ்சின் இருப்பதால், கேமரா, சென்சார்களை முன்புறத்தில் எளிதாக பொருத்த முடிந்தது. அத்துடன், அதற்கான தொடர்புடைய சாதனங்களை முன்புற பானட்டிற்குள் கொடுக்க முடிந்ததாக ஜான் தெரிவிக்கிறார்.

பிரச்னை
ஆட்டோ பைலட் சிஸ்டத்தின் மூலமாக காரை இயக்குவதற்கு தொழில்நுட்ப ரீதியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருந்தால் மட்டுமே சிறப்பானது என ஜான் மற்றும் அவரது குழுவினர் உணர்ந்தனர். இதையடுத்து, ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஒன்றை தயார் செய்து இந்த டாடா நானோ காரில் பொருத்தினர்.

நம்பிக்கை
ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட காரில் பின்புற பயணிக்கு அருகில் ஒரு பொத்தான் உள்ளது. ஒருவேளை காரின் ஆட்டோ பைலட் சிஸ்டம் செயலிழந்தார்கூட, அந்த பட்டனை அழுத்தினால் எமர்ஜென்சி பிரேக் மூலமாக காரை நிறுத்தி விடலாம். எனவே, இந்த காரை சாதாரண சாலைகளில் வைத்து சோதனை செய்ய முடியும் என்று நம்புகின்றனர்.

ஒரு மணிநேரத்தில்...
இந்த டாடா நானோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஆட்டோ பைலட் சிஸ்டத்தை வேறு மாடல்களிலும் பொருத்த முடியுமாம். அதுபோன்று அந்த சாதனங்களை வடிவமைத்துள்ளனராம். அதிகபட்சமாக ஒரு மணிநேரத்தில் ஆட்டோ பைலட் சிஸ்டத்தை ஒரு காரில் பொருத்திவிட முடியும் என்கின்றனர்.

முதலீடு
டிரைவரில்லாமல் இயங்கும் டாடா நானோ கார் திட்டத்தை ஜான் தனது சொந்த சேமிப்பை வைத்தும், தான் பெற்ற காப்புரிமைகளிலிருந்து கிடைத்த பணத்தை வைத்தும் செய்து முடித்துள்ளார். பெரிய நிறுவனங்கள் இந்த திட்டத்தை ஊக்குவித்தால், சிறப்பானதாக மேம்படுத்தும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








