குர்கானில் அறிமுகமாகிறது பாட் கார் டாக்சி சேவை- இனி கரெக்ட் டைமுக்கு ஆஃபிஸ் போயிடலாம்!
நாட்டிலேயே முதல்முறையாக டெல்லி அருகேயுள்ள குர்கானில் 'பாட் கார் டாக்சி' சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான, பூர்வாங்கப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் துவங்கியிருப்பதுடன், இந்த திட்டத்தை கையிலெடுக்க ஆர்வமுடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களையும் வரவேற்றுள்ளது.
போக்குவரத்தில் சிக்கி மூச்சுத் திணறி வரும் மாநகரங்களுக்கான போக்குவரத்தில் மெட்ரோ ரயிலுக்கு அடுத்து, இந்த புதிய திட்டம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மெட்ரினோஸ்
இந்த திட்டத்தை மெட்ரினோஸ் என்ற பெயரில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் குறிப்பிடுகிறது. இந்த புதிய போக்குவரத்து சாதனம் பல்வேறு அதீத அனுகூலங்களை பெற்றிருக்கிறது. அவற்றை தொடர்ந்து காணலாம்.

பயண தூரம்
டெல்லி- குர்கான் எல்லையில் அமைந்துள்ள ஆம்பியன்ஸ் வணிக வளாகத்தின் அருகிலிருந்து, ஷோனா சாலையில் உள்ள பாதுஷாபூர் எம்ஓடி வரை 13 கிமீ தூரத்துக்கு இந்த பாட் கார் டாக்சி சேவைக்கான பிரத்யேக வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

குறைவான முதலீடு
மெட்ரோ ரயில் கட்டமைப்புக்கு ஒரு கிமீ தூரத்துக்கு ரூ.250 கோடியும், மோனோ ரயில் கட்டமைப்புக்கு ஒரு கிமீ தூரத்துக்கு ரூ.200 கோடியும் செலவாகும். ஆனால், இந்த திட்டத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வெறும் ரூ.70 மட்டுமே செலவு பிடிக்குமாம்.

திட்ட முதலீடு
இந்த பாட் கார் டாக்சி சேவைக்கான கட்டமைப்பை ரூ.850 கோடி முதலீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த திட்டத்திற்கான நிலமும் கைவசம் தயாராக இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

நிமிடத்திற்கு...
ஒருவிதத்தில் ரோப் கார் போன்றே இதன் அமைப்பு இருக்கும். அதாவது, இரும்பு கர்டர்கள் மீது தொங்கிச் செல்லும் 1,100 பாட் கார்களை இந்த வழித்தடத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு காரில் 5 பேர் வரை பயணிக்க முடியும்.

நிறுத்தங்கள்
திட்டமிடப்பட்டிருக்கும் 13 கிமீ தூரத்திற்கான வழித்தடத்தில் 13 நிறுத்தங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இந்த பாட் கார்களை இயக்க முடியும்.

தனி நபர் டாக்சி
கால அட்டவணைப்படி செல்லும் பாட் கார்கள் தவிர்த்து, தனியாக ஒரு பாட் காரை முன்பதிவு செய்து எடுத்துச் செல்லும் வாய்ப்பும் உண்டு. அதாவது, கால அட்டவணைப்படி புறப்படும், அடுத்த பாட் காருக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நேராக சென்று முன்பதிவு செய்து கொண்டு கிளம்பிவிடலாம். இதனால், நேரம் விரயம் தவிர்க்க முடியும்.

சட்டுப்புட்டுனு...
ஒரே ஆண்டில் இந்த பாட் காருக்கான வழித்தட கட்டமைப்பை நிறுவி, போக்குவரத்தை துவங்கிவிட முடியுமாம். எனவே, மிக விரைவாக கட்டிமுடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

25 ஆண்டு அவகாசம்
இந்த பாட் கார் கட்டமைப்பை உருவாக்கி, செயலாற்றும் நிறுவனம், டிக்கெட் கட்டணம் மூலம் முதலீட்டை திரும்ப பெறுவதற்கு, 25 ஆண்டுகள் கால அவகாசம் தரப்படும். தற்போது டெல்லி மெட்ரோ ரயிலுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி ஆர்வம்
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மஸ்தார் நகரத்தில் இதேபோன்ற பாட் தானியங்கி காரில் பயணித்தார். அதேபோன்றதொரு திட்டத்தை மனதில் வைத்தே, கடந்த ஆண்டு இந்த பாட் கார் டாக்சி திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தது நினைவிருக்கலாம்.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








