கார்களில் சைடு மிரருக்குப் பதிலாக கேமரா.... புதிய தொழி்ல்நுட்பத்துக்கு ஜப்பான் அரசு அனுமதி
காட்டில் ஒரு குரு இருந்தார்... வனத்தில் உயர்ந்து நிற்கும் மலையின் உச்சியில் சுயம்பாகத் தோன்றிய லிங்கமொன்றை தரிசிக்க அவர் புறப்பட்டார். சீடர்களும் அவருடன் இந்த நெடும்பயணம் மேற்கொண்டனர்.
வழியில் வேரோடு பெயர்ந்து கிடந்த சிறிய செடியொன்றை அவர்கள் கண்டனர். அதை குழி தோண்டி நட்டி வைத்து விட்டு சிறிதளவு தண்ணீரும் ஊற்றினர். அதற்கு வலப்பக்கம் அருகில் இருந்த மரத்தில் அடையாளத்துக்காக நமச்சிவாய என்று எழுதி வைத்தனர். தரிசனத்தை முடித்து விட்டு பல மாதங்கள் கழித்து அதே வழியில் திரும்பி வந்தனர்.

நட்டு வைத்த செடி எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது? எனப் பார்த்தனர். ஆனால் அந்தச் செடி கருகிப் போய் வெறும் குச்சியாக நின்றது. அதற்குப் பக்கத்தில் ஒரு புதிய செடி முளைத்து பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.
அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். நட்டு வைத்த செடியால் வேரூன்ற முடியவில்லை. ஆனால், தானாக முளைத்த செடி தழைத்து செழித்திருக்கிறதே என்று... இந்த முரண்பாடு குறித்து சீடர்கள் கேட்டனர். அதற்கு குரு மௌனமாகப் புன்னகைத்தபடி, கூறினார்.
நாம் நட்டு வைத்த செடி நீரின்றி கருகி விட்டது. பக்கத்தில் விழுந்த விதையோ அதற்கு அருகில் இருந்த மரத்தின் வேரில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி தப்பிப் பிழைத்துக் கொண்டது.
தகுதி இருப்பவை தப்பித்துக் கொள்கிறது என்றார் குரு. இந்தக் கதையின் மூலம் செயல்திறனை மாற்றிக் கொண்டால் ஜெயிக்கலாம் என்பது புலப்படுகிறது.
அதன்படிதான் தொழில்நுட்பங்களும் இன்று மாறிக் கொண்டே வருகின்றன. அதில் வித்தியாசமானவை வெற்றி பெறுகின்றன.
அப்படி ஒரு தொழில்நுட்பத்தை ஜப்பான் கார்களில் பயன்படுத்தப் போகின்றனர். சைடு மிரர் எனப்படும் பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமராக்களைப் பொருத்தும் டெக்னாலஜி அது. அவுட்சைடு ரியர் வியூ மிரர் எனப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

பின்னால் வரும் வாகனங்களை அந்தக் கேமரா பதிவின் மூலமாக காருக்குள் இருக்கும் திரை வழியாக நேரடியாகப் பார்த்து கவனமாக வண்டியை ஓட்டலாம். ஜப்பானின் இஷிகோக் நிறுவனமும், ஜெர்மனின் ராபர்ட் பாஷ் நிறுவனமும் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றன.
இந்த மாடல் கார்களுக்கு ஜப்பான் அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. மோசமான வானிலை, இருட்டான சூழல், மாசு, புகை ஆகியவற்றிலும் கூட இந்தக் கேமராக்கள் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டக் கூடியவை.
அதனால், பின்னால் திரும்பிப் பார்க்காமல், சைடு கண்ணாடியை அட்ஜெட்ஜ் செய்யாமல் நேர்கொண்ட பார்வையோடு மிடுக்காக கார் ஓட்டிச் செல்லலாம்.
இந்த டெக்னாலஜி ஹிட்டடிக்கும் பட்சத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
இதே தொழில்நுட்பத்துடன் கூடிய பிஎம்டபிள்யூ ஐ8 கார்கள் ஜப்பானில் தயாராகி வருகின்றன. வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் 23 லட்சம் கார்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








